Tuesday, December 27, 2016

ஆன்மாவோடு ஓர் இரவு பயணம்...!

8 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி ஒன்றுகூடல் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடுநிசி கழித்து வீட்டிற்கு வந்து கொண்டிந்தேன், வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை சாதுவான மழை, வேகமான இடி, மின்னல் என் சப்பாத்தின் தடம் வீதியில் பெரிதாய் கேட்கத் தொடங்கியிருந்தது அதைக் கேட்ட நாய்களின் ஓலம் மெல்ல மெல்ல வலுப் பெறத் தொடங்கியிருந்தது... 

எனக்கோ பீதி மெல்ல மெல்ல அதிகரிக்கவே வேகமாக நடக்க ஆரம்பித்தேன் எங்கே நான் ஓடினால் வீடு வந்து சேர முன்னர் மூச்சுத் திணறி மயங்கி வழியில் விழுந்தால்  பழி தீர்க்கும் கெட்ட ஆத்மாக்களின் பிடியில் சிக்கி விடுவனோ என்ற பயத்தில் யாராவது வழித்துணை தருவார்களா என்று தேடியபடி நடக்கலானேன், அத்தனை கடவுளும் நொடியில் கண்களில்...

மழையும் கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது தூரமாய் ஒரு உருவம் என்னை நோக்கி வருவதாய் உணர்ந்தேன் அது என்னைக் கடக்கும் முன் நான் வேகமாய் ஓடினால் இன்னும் கொஞ்சம் வீட்டுக்கு கிட்டவாய் சென்றுவிடலாம் என்ற ஆவலில் என்னையறியாமல் ஓட ஆரம்பிக்கிறேன், வீதியில் நின்ற நாய் ஒன்று என்னைக் கலைக்க ஆரம்பிக்கவே ஓட்டத்தை நிறுத்திவிட்டேன் அப்போது தான் ஞாபகம் வந்தது நாய்களுக்கு அமானுஷங்களை உணரும் தன்மை இருப்பதாய் யாரோ முன்னர் சொன்னது.

மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த நாயின் பக்கமாய் நிண்டுவிட்டேன் சிறிது நேரத்தில் தூரமாய் வெளிச்சம் ஆம் ஒரு ஆட்டோ என்னை நெருங்கியது. எப்பிடியாவது அதில் ஏறி வீடு சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் கையை நீட்டி மறித்தேன் ஆட்டோ ஓடி வந்தவர் உருவம் கூட இயல்பிற்கு மாறாய் இருப்பதாய் ஒரு உணர்வு கறுப்பான உருவம், தாடியுடன் அழுக்கான உடை வாயில் பீடி வாயாலும் மூக்காலும் புகை. எதுவானாலும் நான் இதிலே சென்றுவிட வேண்டும் இல்லையேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைப்பாட்டில் வீட்டின் அடையாளத்தை சொல்லி ஏறி அமர்ந்தவுடன் வந்தது ஒரு வித தெம்பு.

பயத்தைப் போக்க ட்ரைவருடன் கதை தொடுக்கிறேன் எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை, அதுவும் எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற அந்த தெம்பில் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.

இது இப்படியிருக்க வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு வீடு அது மரண வீடாய் இருந்தது அதைக் கடக்க வேண்டுமே என்ற பயம் மீண்டும் என் மனதில். மழையோ கனதியாய். மரண வீட்டை ஆட்டோ நெருங்கிய வேளை ஆட்டோ நின்றுவிடுகிறது. ட்ரைவர் இறங்கி ஆட்டோவின் பின்பக்கமாய் செல்கிறார் சில வினாடிகளில் கனதியான அலறல் ஒரு சத்தம். திடுக்கிட்டு பின் கண்ணாடியால் திரும்பி பார்க்கிறேன் கறுப்பாய் ஒரு உருவம் வான் நோக்கிப் போவதை உற்று பார்த்துக்கொண்டு நிற்கிறது ஒரு கறுப்பு பூனை, ஆட்டோவை விட்டு இறங்கி ட்ரைவரை தேடினால் காணவில்லை, எதிர்த்தால் போல் பெரிய லாறி வேகமாய் ஆட்டோவை நெருங்கிக்கொண்டிருந்தது சடுதியாய் விலகி கண்ணை மூடி ஓட்டம்பிடிக்கிறேன் என்னை சுற்றி குளிர்மை உணரப்படுகின்றது ஆன்மாக்கள் உலாவும் இடத்தில் குளிர்ச்சி இருக்கும் என்பதை எங்கோ படித்த ஞாபகம் நினைவிற்கு வருகிறது இருந்தும் ஆன்மாக்கள் என்னைத் துரத்தும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்ததாய் ஞாபகத்தில் இல்லை.

விடிகிறது காலை, வழக்கம் போல வெளியில் வர வீட்டு வாசலில் அடிபட்டு நெழிந்த ஆட்டோ என் நினைவைத் தட்டி எழுப்புகிறது 16 நாட்களுக்கு முதல் நண்பனும் நானும் காரில் பயணிக்கும் போது அதிவேகத்தில் வந்து யாரும் அற்ற வீதியில் ஆட்டோ ஒன்றுடன் மோதி விட்டு பயணித்தது. அதன் தாக்கமாக இருக்க கூடும் என்று நினைக்கும் போதே எனது கைபேசி மணி ஒலிக்கிறது அதை எடுத்து காதில் வைக்கிறேன் நண்பன் வீதி விபத்தில் மரணமானதாய் அவனின் தான் புலம்பி அழும் அந்த அழுகை என்னை அப்படியே புரட்டிப் போட்டது...

Tuesday, December 20, 2016

நதியோடை மீன்கள்...

எப்போதும் கண்களால் வலை வீசும்
காந்தக் கண்ணியை
நதிக்கரையில் சந்தித்தேன்
நிர்வாணமாய் நீந்தும்
மீன்களுக்கு தன் ஆடை வண்ணத்தில்
மின்னிடும் ஆடைகளை
அவள் அவைகளுக்கு
வழ‌ங்கிக் கொண்டிருந்தாள்...

எப்போதும் காந்தப் பார்வை
தரும் அவள் இன்று என்மேல்
காதல் பார்வை எய்கிறாள்!

அருகில் நெருங்கினேன்
எழுந்து நின்றவள்
அருகில் இழுத்தணைத்து
என்
நெற்றியில் முத்தமிட்டாள்...

துள்ளிக் குதித்தன நதியோடை
வண்ண மீன்கள்!
சிலிர்த்தது என் தேகம்!
சலனமற்று காற்றில் ஆடி
நதி விழும் ஆலம் இலை
அந்த நொடி பாரிய சப்தம் எழுப்பி
நீரில் மிதக்கத் தொடங்குகிறது!

விழுந்த இலையின் மேல் பயணிக்கிறது
அவள் இதயமும் என் இதயமும்!
காற்றிடை புகா எம் நெருக்கத்தின்
கதகதப்பில்
பிறந்தன ஆயிரமாயிரம் பட்டம்பூச்சிகள்!
ஈற்றில் நமக்கு நாமே உடையாய்
மாறியிருந்தோம் காதல் பறவைகளின் சப்தம்
கேட்டு ரசித்தபடி!
நீரில் மிதந்துகொண்டிருந்தது
மின்னிடும் அவள் ஆடையும் என் ஆடையும்!

Wednesday, November 30, 2016

நயினாதீவு!

கனத்த மனதோடு வள்ளத்தில் இருந்து பாலத்தில் கால் வைக்கிறேன், ஊருக்கே உரிய தனித்துவமான அந்த ஈர்ப்பு, தாய் அன்பிற்கு ஈடான அந்த குளிர்ந்த காற்றின் வருடல், பாலம் பட்டு தெறிக்கும் கனத்த அலையின் நீர்த்துகள்களின் பன்னீர் வரவேற்பு! அங்கும் இங்கும் நடமாடும் நம்மவர்கள் சக ஊரவர்கள்!
சரவணமுத்து வாத்தியார்ட பேரன் தானே நீர் என்றும், பொன்னம்மா குஞ்சியாச்சிட பேரனா தம்பி நீர் எண்டும், சுசீலா டீச்சர்ட மகனா நீர் எண்டும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் எம் உறவுகளின் பந்தம் இன்றும் அதே பாசத்துடன் புத்துயிர் பெற்றிருப்பதைப் பறைசாற்றும்!
கைப் பையை ஒரு கையில் ஏந்தி எட்டடி நடக்கையிலே கம்பீரமாய் வரவேற்கும் தாயவளின் ராஜ கோபுரம் நாம் அறியா மாத்திரத்தில் நெஞ்சில் கை வைத்து ஒருகணம் கண் மூடி அம்மாளாச்சி தாயே என்று முணுமுணுத்தே நகரச்சொல்லும்!
பலத்த காற்றை எதிர்கொண்டு கோயில் நோக்கி பாலத்தில் நடப்பதன் சுகம் வேறு லெவல்! கிட்டவாய் அம்மாளை தரிசித்து கோயிலடி வாமதாஸ் அண்ணன் கடையடி போகையிலே அது தீவின் நவீனத்தின் அடையாளமாய், நயினாதீவின் குட்டி நகரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அந்த இடத்தை! பெரும்பாலும் எல்லாவசதிகளும் பெருவாரியாய் கிடைக்கும் இடம்!
அந்த இடத்தில் தான் என்னோடு கூட நடக்க சேர்ந்து கொண்டது அந்த பறவை!
அது நிச்சயமாக நம் மூதாதேயராய் தான் இருக்க வேண்டும், நான் நடக்கும் வீதியெங்கும் என் கூடவே வர ஆரம்பிக்கிறது, ஆரம்பத்தில் அதை நான் துரத்திவிடுவதிலே குறியாய் இருந்தேன் காரணம் அது என் கையில் இருக்கும் வடைக்கு குறி வைக்கிறது என்ற நினைப்பில் ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல!
மறுகணம் துரத்த எத்தணிக்கவே, அது என்னிடம் சொல்கிறது 2ம் வட்டாரம் முந்திய கலகலப்பில்லை!
என்னது! காகம் பேசுமா?
ஆம் என்னிடம் பேசியது!
அது தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியிலும் ஒவ்வொருவரைப் பற்றி விளக்கம் கொடுத்தபடியே நகரத் தொடங்கியது!
இது இன்னாருடைய காணி, இது இன்னாருடைய கடை, இது இன்னாருடைய வளவு, இது இன்னாருடைய ஒழுங்கை, அது சொல்லும் ஒவ்வொரு இன்னாரின் பின்னரும் இப்ப இதில் யாரும் இல்லை, யாரும் வந்து பார்ப்பதும் இல்லை, எல்லாம் வெறிச்சோடி போச்சு என்ற கனதியான ஏக்கம் கலந்தே இருந்தது!
அன்னதான மடம் தாண்டி தொடர்ந்தும் நடக்கிறோம், சுந்தா மாமாவின் வீடு இருந்ததற்கான ஒரே ஒரு தடையமாய் உடைந்து புதைந்து போன தொட்டி வீதியோரமாய், சற்று நேரம் இழைப்பாற அந்த குந்தில் அமர்கிறேன் தடையமே இல்லாத வளவில் அழகான வீடு வீறுகொண்டு எழுந்து நின்றது!
உள்ளே என் உறவுகள் அதே கழிப்புடன், நிஜ‌மாக்கப்பட்ட என் கனவுகள் அங்கே உருவங்களாகி தமக்கிடையே பேசிக்கொள்கின்றன! சுந்தா மாமாவின் குரல் மட்டும் எனக்கு தெளிவாக கேட்கிறது காரணம் அவரை நான் அண்மையில் சந்தித்ததன் பிரதிபலிப்பாய் கூட இருக்க கூடும்!
அந்த பறவை எனக்கு சொல்கிறது பார்த்தாயா உன் உறவுகள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று... ம்ம்ம் உண்மை தான் நவீனத்தில் புதையுண்டு கிடக்கின்றன எமக்கான வாழ்வு!
கனவை நிஜமாக்கி விட்டு மேலும் நடக்கிறேன்...
ஏதோ சொர்க்காபுரிக்குள் நுளைவதான உணர்வு!
ஆம் சொர்க்கம் என்றே சொல்லலாம் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது புத்த விகாரையும் அதன் சூழலும் என்னே ஒரு முற்போக்கு, என்னே ஒரு மேம்படுத்தல்! எதிர்ப்புக்கள் பல இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் தடைகள் இல்லை. அந்த சூழல், மொழி மீண்டும் என்னை கொழும்பிற்கு கடத்தி விட்டதான உணர்வு காரணம் எல்லாமே சகோதர மொழிமயமாக்கல்!
அந்த பறவை ஏழன சிரிப்போடு சொல்கிறது இது எல்லாம் நம்மவர் காணிகள், பார்த்தாயா ஆக்கிரமிப்பை! ஸ்ரீமான்ர காணி வீடு எல்லாம் மாளிகை போல! ம்ம்ம் நடக்கட்டும்... இன்னும் எவ்வளவற்றை தாரைவார்க்கப் போகிறோம்!
இப்படியே இறுதி வேகத்தடையை கடந்து நடக்கையில் ரதினி சித்தியின் வளவு எல்லையோடு பௌத்த ஆக்கிரமிப்பு முற்றுப் பெற்றுள்ளது... அதுவும் தொடருமா என்ற ஆச்சரியக் குறியை அந்த பறவையின் பார்வை எனக்கு உணர்த்தியது!
அதைக் கடக்க சிவகாமி சின்னம்மா வளவுக்க சின்னதாய் ஒரு கட்டடம் எட்டிப்பார்த்தபடி... ஏதோ ஒரு செயற்திட்டத்திற்கான ஆரம்பக்கட்டம் என்றே நினைக்கின்றேன்! அது வரவேற்க்கத்தக்கதாய்...
பறவை மேலும் தொடர்கிறது பார்த்தாயா உன்னுடைய இடத்தை... வெறிச்சோடுப்போய், காடுபத்திப் போய் ஆள் நடமாட்டமே இல்லாமல் என்று அது இழுக்கும் போது நிதி அன்ரியின் ஆள் நடமாட்டமே இல்லாத காடு பத்திப்போய் நிற்கும் அந்த வீடு கண்முன்னே!
எங்களால் கனவுகளில் மட்டும் தான் இந்த அழகிய ஊரில் வாழ முடியுமா என்ற கேள்வி வந்து சிறு வண்டு போல் கண்ணில் விழவே கண்கள் பனித்தன, கண்ணில் விழுந்த அந்த வண்டு கூட ஆக்களே இல்லாத இடத்தில் நாம் மட்டும் என்னத்தை கண்டு விட்டோம் என்ற உண்மையை சொல்லி மாய்ந்ததை போல் இருந்தது...
மேலும் ஒரு அடி எடுத்து வைத்து நகர முடியவில்லை! 2ம் வட்டாரம் எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுக்க தொடங்கியது அந்த பறவை...
இதிலே ஒரு பெரிய‌ ஆலமரம், ஆலடி மீனாச்சி, சரவணமுத்து வாத்தியார், பொன்னம்மா, கோபுவீட்டு அம்மம்மா அது தான் என்ர பெரியம்மம்மா, அங்கால குமரைய்யா அண்ணன், இஞ்சால கந்தைய்யா, இந்தா புனிதவதியா, பின்னுக்கு சிவகாமியா, அதுக்கும் பின்னுக்கு குற்றாலம் அதுகளின்ர பெடியள், அதுகளின்ர பேரப்பெடியள் எண்டு அது சொல்லும் ஒவ்வொரு பெயர்களிலும் நிஜ‌மாகி அந்தந்த இடத்தில் என் உறவுகள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள்...
கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை! அம்மம்மா சொல்லும் கதைகள் அனைத்தும் நிஜத்தில் என் கண் முன்னே! அம்மம்மா அடிக்கடி சொல்லுவா 2ம் வட்டாரம் தான் எப்பவும் டாப்! அது உண்மை தான் போலும்! மாட்டு வண்டிப் பாதை, ஒற்றையடிப் பாதை, கிடுகு வேலை, காவோலை, கருக்கு மட்டை கதவுகள்... ஆடு, மாடு, நாய், கோழி வளவுகளிற்கால் அடுத்தவர் வீட்டிற்கு போக வழி என்று 2ம் வட்டாரம் உயிர்பெற்றுக்கொண்டிருந்தது அந்த பறவை சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்!
உண்மையிலே கிராமியத்தை அழகாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்!
வியந்து என் வட்டாரத்தை பார்த்து நிற்கையிலே என் உறவுகள் என்னை அழைப்பதாயும் அவர்களோடு நான் கூடி இருப்பதாயும் இவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என்ற ஏக்கத்தில் நான் அந்த நொடிகளை வாழத்தொடங்கையில் என் தோளில் வந்து அமந்த அந்த பறவை காதோரம் சொல்லுகிறது...
வாழ்க்கை என்பது இது தான்... என்றும் கூட வரும் சொந்த பந்தங்கள், அன்பான உறவுகள், எழிமையான வாழ்க்கைமுறைகள், இதை விட வேறு எதை இப்போது எதிர்பார்க்கிறாய்!
போ!
உன் உற‌வுகளோடு வாழ்ந்து பார் என்று சொல்லியபடி அந்த ஆலமரம் இருந்த மண்ணை தோண்டி புதையுண்டு கொண்டது அந்த பறவை! அது வேறு யாராகவும் இருக்க முடியாது! ஆலடி மீனாச்சியாக தான் இருக்க முடியும்!
பாம்புகள் வாழ நாம் கட்டி வைத்திருக்கும் வீடுகள், புற்க‌ள் புதர்கள் வளர பூட்டி வைத்திருக்கும் எமது வீடுகள், ஓடுகள், சிலாகைகள் கள்ளருக்கு தாரை வார்க்க கட்டி வைத்திருக்கும் வீடுகள் எல்லாம் தரைபட்டமாகிக்கொண்டிருந்தன நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடுத்த அடிகளிலும்!
இதே நிலைமை தான் எனது ஊரின் எல்லா வட்டாரங்களிலும்...
அழிவு என்பது வந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்க முயற்சி செய்யாவிடின்!
நாம் வாழ்ந்த பூமியை, வீட்டை வந்து பார்த்து திருத்தியமைக்காவிடினும் பரவாயில்லை... தற்சமயம் இருக்கின்றதறுவாயிலாவது வைத்துப் பாதுகாக்கலாமே...!

Wednesday, September 28, 2016

ஆளுமையின் நாயகன் - தனபாலன் சேர்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவர் முன்னுதாரணமாக எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட நபர்களின் ஆளுமையால் மாறிக்கொண்டே தான் இருக்கும்.

எனது வாழ்க்கையிலும் ஒருவர் இன்றும் முன்னுதாரணமாய் இருகிறார், அவர் வேறு யாரும் இல்லை என்னுடைய கல்லூரியின் அதிபர் திரு.தனபாலன் சேர் அவர்கள். அவரது ஆளுமை, ஆற்றல், முற்போக்கு நடத்தைகள் அபாரமானது. சென். ஜோன்ஸ் கல்லூரியில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் படித்தவர்கள் பாக்கியசாலிகள். 



நான் அறிந்தவரையில் தனபாலன் சேரின் ஆளுமை கண்டு வியந்தவர்கள் பலர், நேர்மையான பேச்சு, தரமான ஆங்கிலம், நேரம் தவறாமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றுக்கு இன்றும் உதாரணம் எம் ஆசான் தனா சேர் தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரை நாம் இன்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றோம் காரணம் நாம் கடந்து வந்த பாதையில் தனபாலன் சேரின் வழிகாட்டல் படி ஏதோ ஒரு இடத்தில் நம்மை இன்றும் கடக்க வைக்கிறது.

சென். ஜோன்ஸ் இல் படித்தவன் என்ற திமிர் எல்லா சென். ஜொன்ஸ் மாணவனுக்கும் இருந்தாலும் தனபாலன் சேரின் ஆளுமையின் கீழ் வளர்ந்தவனுக்கு என்றும் கொஞ்சம் கூடவே திமிர் இருக்கும் காரணம் அவன் பதப்படுத்தி வளர்க்கப்பட்டவன்,  வளர்க்கப்பட்டவன் என்பதை விட சேரைப் பார்த்து வளர்ந்தவன் என்று கூறுவது சால சிறந்தது.

நான் ஒரு ஆசிரியரைப் பார்த்து முரட்டுத்தனமாக ரசித்திருக்கிறேன் என்றால் அது தனபாலன் சேர் மட்டுமேயாகத்தான் இருக்க வேண்டும், தனபாலன் சேர் குணாதிசயங்கள் பற்றி சொல்லுவதானால் அளவான உயரம், மிடுக்கான தோற்றம், கட்டக்கையோ இல்ல புல்சிலீப் சேர்ட் போட்டு அதை வடிவா இன் பண்ணி அதற்கு ஏற்றால் போல் டையும் கட்டி ஒரு கையை (கூடுதலால இடது கை) பொக்கட்டுக்குள் வைத்து அவரின்ர பங்களாக்குள்ள இருந்து கிரவுண்ட் கரையோரமா நடந்து வாற ஸ்டைல் இருக்கே! சொல்ல வார்த்தைகள் இல்லை... சுருங்க சொன்னால் தனபாலன் சேரைப் போல் கம்பீரமாய் நடக்கப் பழகி என் போல் தோற்றவர்கள் பலர்! 

ஆசிரியர்கள் பிரச்சினை தொடங்கி, தனிப்பட்ட மாணவனின் பிரச்சினைகள் வரை அத்தனையையும் சுமூகமாக அணுகக்கூடிய கைங்கரியம் தனபாலன் சேரிடம் கொஞ்சம் அதிகமே இருந்தது எனலாம். அதற்கு உதாரணம் நான் என் அனுபவத்தையே சொல்கிறேனே!


நான் ஒரு தடகள விளையாட்டு வீரன், ஆகையால் கோலூன்றி பாயும் பயிற்சியில் மாலையில் ஈடுபடும் போது ஒருமுறை தனபாலன் சேர் அவரது பங்களாவில் இருந்து பார்த்து விட்டு எனக்கு கிட்டே நெருங்குகிறார், எனகோ நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குகிறது, கிட்டவாய் வந்தவர் சிறு புன்னகையுடன் Welldone i have seen you from my house, you are doing well in pole vault, You know Prabakaran master! he is good in pole vault, you better get some advice from him, he will guide you... என்று கூறியபடி மீண்டும் புன்னகைத்து அவரது ஸ்டைலில் நாடியை வலது கையால் தடவிய படி நடக்கிறார். 

இப்படியே நாட்கள் ஓடி விடுகிறது தனபாலன் சேர் ஏதோ கல்லூரி விசயமாய் கொழும்புக்கோ, எங்கேயோ சென்று விடுகிறார். அதை அறியாமல் நான் ஆங்கிலத்தில் தனபாலன் சேரிற்கு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி விடுகிறேன் உயரம் பாய்தல், கோலூன்றி பாய்தல் விளையாட்டுக்களுக்கு எங்களுக்கு பொதுவான ஒரு மெத்தை வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேரில் சென்று எனது கோரிக்கையை முன் வைக்க தயக்கதினால். அந்த‌ கால கட்டத்தில் அமலசீலம் மாஸ்டரும், ஞானப்பொன்ராஜா சேரும் தான் கல்லூரி நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 

நான் அனுப்பிய கடிதம் அமலியிடம் சென்றுவிடுகிறது, அமலி அதை பிரித்து படித்துவிட்டு அமளிப்பட்டு ஆள் அனுப்புகிறார் என்னை கையோடு கூட்டி வரும் படி, அப்போது நாங்கள் வில்லியம்ஸ் ஹாலில் கொமர்ஸ் செக்ஸனுக்குள் இருக்கிறோம். எட்டுக்குண்டி என்ர பெயரை சொல்லிக்கொண்டு அமலசீலன் மாஸ்டர் பிறேம்ஜியை கூட்டிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லவே எனக்கு விளங்கிட்டு அமலி கையில தனபாலன் சேருக்கு நான் எழுதின கடிதம் கிடைச்சு மனுசன் குழம்பிட்டு எண்டு.

கொஞ்சம் தயக்கத்துடன் அமலியிடம் போறன், அமலியின்ர முதல் கேள்வி ஏன் இப்பிடி கடிதம் எழுதினி? உம்மட கோரிக்கை நியாய‌மானது தான் இருந்தாலும் அத நீர் பீ.ஓ.ஜீ மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் எண்டு சொல்லிக்கொண்டே ஞானப்பொன்னியிடமும் இதைப் பற்றி விவாதிக்கிறார். நான் சொன்னன் எனக்கு நேர போய் கதைகிற பயத்தில தான் இப்பிடி கடிதம் எழுதினன் எண்டு சொல்ல, எனிவே ப்றின்சிப்பல் வந்தோண இத நான் குடுக்கிறன் நீர் சேர வந்து சந்தியும் எண்டு என்னை அனுப்பி வைகிறார் அமலி.




ரெண்டொரு நாளில் தனபாலன் சேர் பாடசாலைக்கு வந்ததும் மீண்டும் அழைப்பு வருது பிறேம்ஜி உம்மை ப்ரின்சிப்பல் வந்து சந்திக்கட்டாம். அண்டைக்கு உண்மையிலே பயந்திட்டன். பதற்றத்துடன் தனபாலன் சேரின்ட றூமுக்க போறன். 

Excuse me Sir என்ற வாறே உள்ளே நுழைகிறேன். 

முழு நேர பயத்துடன் சென்ற எனக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. 

தனபாலன் சேர் கையில் என்னுடைய கடிதம் இருந்தது, கடிதத்தை ஆட்டி ஆட்டி சொல்லுகிறார்: 
Excellent letter you have written and the way of writing is perfect. 
மிரண்டே விட்டேன். சிறிது நேரம் கடிதம் பற்றி கதைத்தவாறே கடிதத்தின் சாராம்சத்தை பற்றி எனக்கு விள‌க்குகிறார்...

ஏன் இன்னமும் மெத்தை(Mattress) வாங்கப்பட‌வில்லை என்றும் அதற்கான வேலைப்பாடுகள் நடப்பதாகவும் கூறி, இனி ஏதும் இப்படியான பிரச்சினைகள் இருந்தால் கடிதம் தேவையில்லை எந்த நேரமும் நீர் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறிய அந்த motivational words என்னை ஏதோ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது தனபாலன் சேரை. 



இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தன்னலம் பாராது பொது நலமாக பொதுப்பட்ட பிரச்சினைகளை தானே அணுகி தீர்த்து வைக்கும் அவரது குணம் என்றுமே பாராட்டுக்குரியது.

இன்றும் நான் நேரம் தவறாமால் நிகழ்ச்சிகள், வைபவங்கள், வேலைத் தளங்களுக்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கல்வி கற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியே!
இன்றும் நான் ஆங்கிலத்தில் ஓரளவு புலமையோடிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனபாலன் சேர், மற்றும் என் சென். ஜோன்ஸ் கல்லூரி தான்.

இப்படிப் பட்ட ஆளுமை மிக்க மனிதரின் கீழ் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொள்கிறேன்... 

Monday, September 26, 2016

26 - 09 - 1987- திலீபன் அண்ணாவின் இறுதிநாள்!

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம்.
பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழுப்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.
கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,
"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.
மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?
மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.
ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.
பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.
உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.
அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.
என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.
திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.
'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'
இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?
265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்!
எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!
காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.
பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?
அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.
பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.
சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்?
அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
நன்றி : மு.வே. வாஞ்சிநாதன்

Thursday, September 8, 2016

யாழ்ப்பாணத்தில வாடகை டீ.வி...

ஏனோ தெரியல கொஞ்ச காலமா பழைய பசுமையான நினைவுகள் மனசுக்க புது புது மலர்களாய் பூக்குது... கைபேசியில பழைய போட்டோஸ் ஏதும் இருக்கா எண்டு கிண்ட தொடங்கவே மனசு தொண்ணூறுகளிற்குள்ள போய்டுது...
95/96 ஆண்டுகளிற்கு பின்னர் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வினியோகிக்கப்படத் தொடங்கியிருந்தது அதுவும் சீராக என்று சொல்லும்படியாக இல்லை அந்த காலகட்டத்தில் தான் முதன்முதலில் எங்கள் வீட்டில் டீ.வி. போட்டு படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது, எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அந்த நாள் ஒரு திருவிழா போல இருக்கும்.
இப்படி சீரற்ற மின்சாரம் மற்றும் மின்சாரமே இல்லாத காலகட்டத்தில் கொஞ்சம் வசதி படைத்தோர் மற்றும் இலத்திரணியல் உபகரணங்களை பிஸ்னஸ் செய்வோர் டீ.வி, டெக் மற்றும் ஜெனரேற்றர்களை ரெண்டு மூன்று நாட்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்க தொடங்கியிருந்தார்கள். அந்த நாளைல ஒரு நாள் வாடகை 50/- எண்டு நினைக்கிறன். ஒரு சிலருக்கு இதுவே ஒரு பெரிய பிஸினஸ்.

நல்லூரடியிலும் யாரோ ஒருத்தர் டீ.வி வாடகைக்கு குடுக்கிறவர் எண்டதை கேள்விப்பட்டு பெரியண்ணாவும் பெரியப்பா ஒராளும் போய் கதைச்சு அந்த டீ.வி, டெகோட அவயளே புதுசா வந்த பட கெசட்டுக்கள் ரெண்டு மூண்டையும் தருவினும், அதையும் எடுப்பிச்சுக் கொண்டு வீட்ட வந்திட்டினும்.
பிறகு அதை பெரிய கரியர் பூட்டின சைக்கிளுக்கு பின்னால வைச்சு கட்டிக் கொண்டு வந்து, வீட்ட கூட வந்தவர் பொருத்தி தந்திட்டு சொல்லுவார் இப்பிடி இப்பிடி எல்லாதையும் செய்யோணும் எண்டு காட்டிக்குடுத்திட்டு தொடக்கி வைச்சிட்டு போய்டுவார் மிச்சத்த பெரியண்ணா தான் பாத்துக்கொள்ளுவான் கூடவே சின்னண்ணாவும் ஒட்டிக்கொள்ளுவான் நாங்கள் எல்லாம் சின்ன வானரக் குட்டிகள் போல பின்னாலையும் முன்னாலையும் திரிவம் என்ன தான் நடக்குதெண்டு பாத்துக்கொண்டு ஏன் எண்டால் எங்களுக்கு எப்படா டீ.வில படம் பாக்கலாம் எண்ட மனநிலை...
மறுபக்கம் பெத்தம்மாவும் அம்மாவும் அஞ்சரைக்கே புட்டு எல்லாம் அவிச்சு வைச்சிட்டு படத்துக்காக பாத்துக்கொண்டு இருக்க அப்பப்போ அவையளுக்கும் கரைச்சல் குடுத்து பேச்சும் வாங்கி அது ஒரு விதமான சுவாரசியம்.

ஜெனரேட்டர் இயங்க தொடங்குது டீ.வியில் வெள்ளை கறுப்பு புள்ளி விளத் தொடங்குகிறது சத்தமான இரைச்சலுடன், எங்கோ நிண்ட நாங்கள் எல்லாம் பறந்தடிச்சு டீ.விக்கு முன்னாலையே போய் குந்தினம்
அப்ப பின்னால இருந்து அம்மாவின்ர குரல் எல்லாம் கொஞ்சம் பின்னால வந்து இரு, கிட்ட இருந்து பாக்க வேணாம் கண்ணுக்கு கூடாது, காதில் வாங்கிக்கொள்ளவில்லை ரெண்டாம் தரம் அம்மாவின் சொல்லும் தொணி மாறவே இருந்த வாக்கிலே கை ரெண்டையும் பின்னால ஊணி ஒரடி பின்னுக்கா இருந்து கொண்டோம்.
டீ.வி போட்டு விட‌ வந்தவர் டீ.வி பட்டன்கள ஏதோ எல்லாம் செய்ய அப்பிடியே டெக்ல என்னமோ பண்ணிக்கொண்டிருந்தார், அந்த காலத்தில எங்களுக்கு இது எல்லாம் றொக்கட் சயன்ஸ் மாதிரி இருந்திச்சு ஆனா என்ன எங்களுக்கு தேவ பெரிய டீ.வி ல படம் பாக்கோணும் அத அடுத்த நாள் போய் பள்ளிக்கூட பெடியளுக்கு சொல்லி பெருமப்படோணும்.
புள்ளிப் புள்ளியையே கண் வெட்டாம பாத்துக்கொண்டிருக்க திடீர்னு வானவில் மாரி கோடு கோடா வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, நாவல், சிவப்பு, கரு நீலம் எண்டு டீ.வில விழுந்திச்சு கொஞ்ச நேரத்தில படம் கலங்கி கலங்கி போக தொடங்கி இருந்திச்சு அப்பாடா படம் தொடங்க போது எண்டு சின்னப்பிள்ள தனமா வெள்ளாந்தி போல முதல் படத்த‌ பாத்திட்டு இருக்கிற மனசிருக்கே அது தான் சார் கடவுள்...
படம் ஓட தொடங்குது கொஞ்ச நேரம் ஆனந்த கொண்டாட்டம் எல்லாரும் படம் பாத்தாலும் நாங்க எல்லாருக்கும் மாறி மாறி சொல்லுறம் அண்ணா படம் தொடங்கிட்டு, அம்மா படம் தொடங்கிட்டு... கொஞ்ச நேரம் பெரிய அமளி துமளி வீட்டுக்க டீ.விக்கு முன்னால இருந்து கொண்டு.
ஒரு படம் ஓடி முடிய இரவு சாப்பாட்டுக்கு ஓய்வு, திரும்ப அடுத்த படம் எண்டு ராத்திரி முழுக்க ஒரே கொண்டாட்டம் தான் அதுவும் விடியும் வரைக்கும், கூடுதலா வெள்ளிக் கிழமைகளிலே இவ்வாறான படம் போடும் வேலைகளை நம்மூர் காரங்கள் செய்தாங்கள். இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டு படம் பார்த்திருக்கிறோமா என்று இப்போதெல்லாம் நினைக்கும் போது ஏக்கமாவும், சந்தோசமாகவும் இருக்கிறது.
அதுவே காலம் செல்ல செல்ல மின்சாரமும் வரத் தொடங்க புதிதாக டீவி வாங்குவோரும், அதுவரை மூடிக் கட்டி மூலையில் போட்டிருந்த டீவிக்களைத் திருத்த முற்பட்டோருமாக டீவி, அன்டெனா விற்பனை வேகமாக‌ நடைபெற தொடங்கி இருந்தது. VHF இற்கு ஒரு பெரியா சைசாகவும், UHF இற்குச் சிறிதாக மீன்முள்ளு போன்ற ஒரு அன்ரெனாவும் தனித்தனியாக வாங்கி அதைப் பொருத்துவது அடுத்த தலையிடி பிடிச்ச வேலை, அதுக்கென வேறு 20 அடி பைப்புகளை வாங்க‌ வேண்டும், இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்திற்குள் வர தொடங்கிய காலங்களை மனசு புதுப்பித்துக் கொண்டிருக்கையிலே கையில் இருந்த கைபேசிக்கு நான் யூடியூப்பில் சப்ஸ்கிறைப் செய்த செனலில் இருந்து புதிதாக பட ட்ரெயிலர் வந்து விட்டதாய் அலார்ட் வருகிறது...
அன்று ஒரு படம் பார்க்க நாம் பட்ட பாடு இப்போதெல்லாம் ஒரு நொடியில் நினைத்த படத்தை பார்க்க முடியுமானதாக இருந்தாலும் அன்றைய நாளைப்போல இன்பம் கிடைப்பதில்லை...! அது ஒரு கனாக்காலம்! 

Wednesday, September 7, 2016

தட்டிவானை தடவிப்பாக்கிறன் இங்கின கிடைக்குமான்னு...

நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகின்ற நிலையில் ஒரு சில பிடித்தமான அதுவும் ஊர் வாழ் மக்களுக்கு பிடித்தமான தட்டிவான் என்றழைக்கப்படும் பயணிகள் ஏற்றும் வாகனம் கொஞ்சம் கொஞ்சமான வழக்கொழிந்து வருவதான உணர்வு தோன்றியிருக்கிறது...

வாகன நெரிசலில் கடுப்பாகி நின்ற போது தட்டிவான் போலான ஒரு வாகனம் என்னை கடக்க கண்டேன் ஞாபகங்கள் தொண்ணூறுகளிற்குள் சென்று விடுகின்றது!

நான் அறிய தட்டிவானை அதிகமாக கண்டது குறிகட்டுவான்-யாழ்ப்பாணம் போக்குவரத்து சேவையில் தான், அது தவிர நெல்லியடி, அச்சுவேலி பக்கங்களிலும் அந்த தட்டிவான் பாவனை இன்னமும் வழக்கத்தில் உள்ளதாக கேள்வி சரியாகத் தெரியவில்லை.

இதன் அமைப்பு எப்படியிருக்கும் என்றால் சிறிய ரக லொறியைப் போல உள்ளே ஆசணங்கள் பொருத்தப்பட்டு பின்புறமாக பாதி பலகையை நீட்டி விட்டு சங்கிலியால் இரு புறமும் கொழுவி விட்டிருப்பர் அப்படியாக அமைக்கப்பட்ட பலகையையே தட்டி என்று அழைப்பதாலோ என்னவோ அந்த வாகனத்திற்கு தட்டிவான் என பெயர் வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

பஸ் பிரயாணப்பிரியர்கள் இந்த தட்டிவானில் பயணிப்பரேயானால் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தினை பெற்றிருப்பர் காரணம் இந்த தட்டிவான்களுக்கு யன்னல்கள் கிடையாது ஆகவே  தட்டிவான் பயணிக்கும் வேகத்தில் எல்லா புறமும் காற்று அலாதியாய் பயணிகளை வந்தடையும் இந்த பயணத்தை அதிகமாக யாழ்ப்பாணத்து மக்கள் அனுபவித்திருக்க கூடும்.


பயணிகள் தவிர சந்தைப் பொருட்கள் அதாவது பழவகைகள், மரக்கறி வகைகள், ஆடு மாடு என எல்லாவற்றையும் ஏற்றி செல்லும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்த ஒரு வாகனமாக இந்த தட்டிவான் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் நான் கதிர்காமம் சென்றிருந்த வேளை அங்கே தட்டிவான் பாவனை இன்னமும் இருக்கின்றமையை அவதாணித்தேன் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது இவையெல்லாம் நான் தட்டிவான் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே ஞாபகத்திற்கு வருகின்றன. 

பாதுகாப்பான இயற்கையை ரசித்தபடி காற்றுடன் முழு நேரம் கதை பேசியபடி பயணிக்க ஆர்வமிருந்தால் ஒரு தடவை தட்டிவானில் பயணித்துப் பாருங்கள்... 

ஒரு சில பொருட்கள் எவ்வளவு காலம் சென்றாலும் எம் மனதை விட்டு இலகுவில் மறைந்து போகாது, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவை போன்ற அல்லது அவை கண்ணில் தென்படும் போது நாம் நம்மை அறியாமல் எமது கடந்த கால பசுமை நினைவுகளிற்குள் இலகுவாக கடத்தப்பட்டுவிடுகின்றோம்.

அந்த மாதிரியான ஒரு சுவாரசியமான பயண அனுபவமே இந்த தட்டிவான் பயணங்கள், எதிர் காலத்தில் இம் மாதிரியான பயணங்கள் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிட போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Sunday, September 4, 2016

கணினி வகுப்பில் முதல் நாள்...

2000ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் மெல்ல கணினி பாவனை வரத் தொடங்கிய காலம்.
என்னையும் குட்டி அண்ணாவையும் அம்மா கணினி படிக்க திருநெல்வேலியில் இருக்கும் கணினி ஆசிரியரிடம் சேர்ப்பித்தார், பின்னர் தான் தெரிந்தது அது எனது நண்பன் சிவராஜ்ன் அக்கா என்று...

மெல்ல மெல்ல தட்டுத்தடுமாறி கணினியை பயில தொடங்கினோம், முதல் பாடம் பெயிண்டில்(Paint) வட்டம் சதுரம் கீறி அதற்கு கலர் அடிப்பது.

அது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை என்றாலும் அந்தக் காலத்தில் பாவனையில் இருந்த மவுசை(Mouse) கையாள்வதில் தான் வெற்றி இருந்தது ஏனெனில்  மவுசை கொஞ்சம் அசைத்தால் மவுஸ் பொயிண்டர்(Mouse Point) எங்கே போய் சொருகிக்கிடக்குதெண்டு மொனிட்டருக்குள்(Monitor) பல தேடல்கள்...

ஒருவழியாக பலத்த போராட்டத்திற்கு மத்தியில் ஓரளவு கணினி அறிவை பெற்றுக் கொண்டோம்...!

இப்படியே 2004ம் ஆண்டு வந்து விடுகிறது கொஞ்சம் மேலதிகமாக கற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்த ஏசியன் கணினி நிறுவனத்தில்(Asian Computer Institution) போய் சேர்ந்தேன்...

அங்கு வரிசையில் அடுக்கப்பட்ட கணினியில் ஒரு கணினியில் போய் அமர்ந்தேன் எனக்கு இடது புறத்தில் ஒருவன் வந்து அமர்ந்து கொண்டான் நான் அறிய அவனுக்கு அது தான் முதல் ஓ இரண்டாவது வகுப்பாக இருக்க வேண்டும்.

கணினி ஆசிரியர் சொல்வதை செய்ய ஆரம்பித்தவன் சிறிது நேரத்தில் எனது எனது மொணிட்டரை(Monitor) உற்று பார்த்தவண்ணம் ஏதோ தேடலில் இருந்தான் பெடியன்...
இதை கவனித்த நான் என்ன என்று கேக்க அவன் அப்பாவியாய் ஒரு பதில் சொன்னான் "இல்ல மவுஸ் பொயிண்டை வலது பக்கம் இழுத்தன் அதை காணல உங்கட மொணிட்டருக்க வந்திருக்குமோன்னு தான்...!"

ஆரம்ப காலத்தில் மவுஸ் பொயிண்டரோரு நான் போராடிய நாட்கள் நினைவிற்கு வந்தது...
இவன் என்னை விட ஒருபடி மேலே போய் அடுத்தவன் மொணிட்டரில் தேடியிருக்கிறான் அம்புட்டும் தான்...!

ஆரம்ப கால கணினி வாழ்க்கை அற்புதமானது எங்களைப் போல பல அன்றைய கணினி போராளிகள் இன்று கணினியில் கைதேர்ந்தவர்களாய்... 

Friday, September 2, 2016

நல்லூரில் இன்று நான்! கச்சான் கடையும் நானும் - நினைவில் 2

தேடுவாரத்துக் கிடக்கும் கச்சான் சாப்பிடும் ஆசை எல்லாம் அந்த 25 நாட்களுக்கும் அளவே இன்றி அத்தியாவசியமாகும். நல்லூருக்கு போனால் கச்சான் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்தால் அந்த நாள் அர்த்தமற்றதாய் ஒரு பிரம்மையை தோற்றுவிக்கும் காரணம் நல்லூருக்கு போறவன் எல்லாம் கட்டாயம் கச்சான் வாங்கி தின்னாம வீட்ட போக மாட்டான் என்பது ஐதீகம்... 

கடவுள் சித்தம் நான் நல்லூர் கோயிலடியிலே பிறந்தது வளர்ந்தது எல்லாமே, செரியா 4 மணிக்கு கம்பீரமாய் அடிக்கும் அந்த நல்லூரான் மணி ஆலய தரிசனத்திற்கான புறப்பாட்டு மணியாக மனதில் பதிந்து கொள்ளும் திருவிழா நேரம் அதுவும் பின்னேரம் வீதிகள் சல சலக்க தொடங்கிவிடும் வியாபரிகள் கூக்குரல் போட‌ தொடங்கிவிடுவார்கள் வீதியின் இரு மருங்கும் ஒரே களேபரமாய் தான் காணப்படும் குறைந்தது இரவு 9-10 மணி வரைக்காவது. கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து கோயிலுக்கு போய் சாமியுடன் ஐக்கியமாகி வீடு திரும்பும் இருள் தூழ்ந்த வேளையில் கச்சான் கடைக்காரருடன் பேரம் பேசுவதிலும் ஒரு சுவாரசியம் இருக்க தான் செய்கிறது.

(+) நல்லூர் நடு மையம் என்றால் நாலா புறமும் கட்டாயம் கச்சான் கடைகளால் அணிவகுத்திருக்கும் அந்த நல்லூர் ஏரியாவே, சரி விசயத்திற்கு வருவம்...

சாமிய இருப்புக்கு அனுப்பிட்டு பின் வீதியால நடக்கிறன் நான்,
முதல் கடைல இருந்து தொங்கல் கடை வரைக்கும் ஆக்களைக் கண்டோன கத்த தொடங்கிடுவாங்கள்:
அம்மா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போங்க‌
அக்கா வாங்க சாப்பிட்டு பாத்து வாங்குங்கிட்டு போங்க‌
தம்பி வாடா சுடச்சுட கச்சான்
அண்ண வாங்க இப்ப வறுத்தது சுட சுட  கச்சான், சாப்பிட்டு பாத்து வாங்குங்கோ... ஓடியாங்கோ எண்டு ஆளாளுக்கு கூவ.... 



சரி அவங்கட கூவலுக்கு சொவி சாச்சு ஏதாச்சும் ஒரு கடைக்க பூந்தா முதல் றவுண்டு சுளகுக்க குவிச்சிருக்கிற கச்சான்ல ரெண்டு மூண்ட எடுத்து திண்டு பாத்திட்டு இந்தா இதில அம்போருவாக்கு போடுங்க போளம் போடாம எண்டு சொல்லிட்டு எங்கட பாட்டில அந்த குவியல்ல ஒண்ணொண்ணா எடுத்து கொறிச்சுக்கொண்டே நிண்ட படி பேரம் போசுவம் பேசினன்...

என்னம்மா கொஞ்சமா போடுறியள் இன்னும் கொஞ்சம் கிள்ளி போடாம அள்ளி போடுங்க எண்டு சொல்லி சொல்லி கச்சான் பாஃக்கு வாய் மூடாத அளவுக்கு நிரப்பிக்கொண்டு வழி நீளமும் திண்டபடி வெளிக்கிட தெரிஞ்சவன் எவனாச்சும் சிக்குவான் பின்ன அவனுக்கும் நீட்டி கதைச்சு கதைச்சு நிக்க அந்த பக்கட் முடிஞ்சிடும்...

சரி போவம் எண்டு அவன காய் வெட்டிட்டு இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் கோயில் பக்கமா நடக்க இன்னும் ஒரு அடிமை சிக்கும் அதையும் கூட்டிக்கொண்டு வாடா மச்சான் அப்பிடி அந்த பின் வீதி மணலுக்க இருந்து கச்சான் சாப்பிட்ட படி சரக்கு பாப்பம் எண்டு அதையும் இழுத்துக்கொண்டு மணலுக்க இருந்து திண்டிட்டு ஒரு ஒம்பது மணி வரைக்கும் அரட்டை அடிச்சு வீட்ட போகேக்க இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக் கொண்டு போய் வேட்டி எல்லாம் களட்டி வைச்சிட்டு ஈசி சியர்ல படுத்துக் கிடந்து திரும்பவும் மிச்சம் சொச்சம் எல்லாத்தையும் கொறிச்சு தள்ளி கச்சான் கோதெல்லாத்த்தையும் அங்கங்க கொட்டி அம்மாட்ட பேச்சும் வாங்கி வீட்ட கூட்டிட்டு விறாந்தைக்க வெறுந்தரைல விட்டத்த பாத்தபடி மல்லாக்கா படுத்தோண வரும் பாருங்க ஒரு மரண நித்திரை அது தான் சார் சொர்க்கம்...! 

நல்லூரில் இன்று நான் - நினைவில் 1

காலையில் கொழும்பில் இருந்து வந்து மளமளவெண்டு குளிச்சு வெளிக்கிட்டுக் கொண்டு நல்லூருக்கு விறுக்காய் நடக்க ஆரம்பிக்கிறேன், வைமன் றோட்டில இருந்து பாரதியார் சிலை அரசடி முதலாம் பரியரைத் தாண்ட எத்தணிக்யில் அங்கு போட‌ப்பட்டிருக்கும் பரியல் நவீனமாய் காணப்பட்டது அதாவது சில்லுகள் பூட்டி பொலீஸ் காவலுடன், அதைக் கண்ட கணமே நினைவுகள் என்னை 2000த்திற்குள் அழைத்து செல்கிறது...
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாரணர்கள் சிறப்பாய் நல்லூரில் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்த காலமது, காலையில் நாங்கள் கோயிலுக்கு போறதுக்கு அலார்ம் வைப்பதே இல்லை காரணம் அவர்கள் 4 மணியானால் நல்லூர் முனிசிபல் கவுன்சிலுக்க இருந்து பரியலுக்கு போடுற ரம்(பீப்பா பரல்)ஐ காலால் உதைத்து உதைத்து உறுட்டி வரும் சத்தமே எங்களை எழுப்பி விடும்.
அவர்கள் மட்டுமல்ல சென் ஜோன்ஸ், சென்றல், வேறு சில பாடசாலை மாணவர்கள் ஒன்றாய் இணைந்து சிறப்பாக கடமையாற்றிய காலம் என்றால் அக் காலத்தையே சொல்வேன்... அவ்வளவு நேர்த்தி கடமையில் ஆனால் இன்று அவ்வாறோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை...
மேலும் நடக்கிறேன் இரு மருங்கும் என்றும் மாறாத ஆனால் முகங்கள், பாஷைகள் மாறி
ன கச்சான் மற்றும் மாலை சக விளையாட்டுச்சாமான் கடைக் காரர்கள் 'அக்கா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போலாம், அண்ண வாங்கோ சாப்பிட்டு பாத்து வாங்குங்க சுட சுட கச்சான், அம்மா வாங்கோ நல்ல சாறீஸ் மலிவு மலிவு, எது எடுத்தாலும் அறுவோருவா எது எடுத்தாலும் அறுவோருவா...
இடை விடாத கூவல்கள் இவைகளைக் கடந்து திலீபன் தூபியடி முச்சந்தியை அடைகிறேன் அது தான் ஒரு காலத்தில் எங்களது கோட்டை என்றே சொல்லலாம் கோயில் திருவிழாக்கள் முடிந்து நட்புக்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து லூட்டியடிக்கின்ற எமது அசைக்க முடியா கோட்டை. அதை பல புது முகங்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் ஆனால் இன்றும் நாங்கள் கூடி கதைப்பதாய் நினைவில் நிழல்ப்படம் ஓட ஆரம்பித்து விட்டது... பழமைகளை ஆங்காங்கே நினைவுகளாக்கி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் சின்னவனாக மாறிக்கொண்டருக்கிறேன் என்னையே அறியாமல்...
மெல்ல வலது பக்கம் திரும்பினால் றியோவில் அன்று போல் இன்றும் எந்நேரமும் கூட்டம் அலை மோதியபடி ஆங்காங்கே பெட்டிக்கடைகளும் விளையாட்டுசாமான் கடைகளும் அது போக மோட்டார் சைக்கிள் கடைகளும் என நல்லூர் ஏரியாவே களைகட்டியிருந்தது இவைகள் தான் இன்றும் மாறாத அதே பழமையுடன் நவீனமும் கலந்து...
விசித்திரமான பறக்கந்தட்டுக்கள், வான வேடிக்கைப் பொருட்கள், வீதியில் கற்பூரம் விப்போர் என வீதி எந்த நேரமும் அல்லோலப் பட்டுக் கொண்டே இருக்க நான் முனிசிப்பல் கவுன்சிலைக் கடக்கிறேன் நல்லூர் சிவன் கோயிலில் புத்தகக் கடையும் அதற்கு எதிர்த்தாற் போல் உடுப்புக் கடையும் மாற்றம் இல்லாமல்... ஏறத்தாள நான் சிறுவனாக மாறியிருந்தேன் கண்டதெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனப்பாங்கோடு நான் நடந்த வீதியில் நிசப்தமாக நான் நடந்தாலும் நினைவுகள் போடும் குழப்பங்கள் என்னை எதையாவது வாங்கி விட தூண்டிய வண்ணம்! சரி பழைய நினைவிற்காய் எதையாவது வாங்கி விட வேண்டும் ஆனால் கோயிலுகுக்கு போய் திரும்பி வரும் போது என்று சிவன் கோயிலைக் கடக்கையிலே அந்த காலத்தில் 5/=க்கு வித்த அந்த பெரிய பலூன் 15/- என்று கூறியபடியே முகத்துக்கு நேரே நீட்டினார் அந்த பலூன் வியாபாரி அந்த கணமே மனசு சம்மதிக்கிறது வாங்கிக் கொண்டே நடக்கிறேன்...
ஆதீன முன்றல் கடக்கையில் சிறுமி அப்பாவிடம் அடம்பிடித்தபடி அவள் அந்த பலூனுக்காய் அடம்பிடிப்பது அழகாய் இருந்தது நான் கோயிலுக்கு தானே போறன் இந்தாங்கோ அண்ண இத இவளுக்கு குடுங்கோ என்று அதை குடுத்துவிட்டு இரண்டாவது பரியலைத் தாண்டுகிறேன் வீதி முழுவதும் சிவப்பு வெள்ளை சீலையால் மறைத்து கட்டப்பட்டு இருந்தது இந்த வேலைப்பாடு கடந்த திருவிழாவில் இருந்து அரங்கேறியிருக்கிறது ஏதேதோ மாற்றம் வருசா வருசம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ம்ம்ம்
கோயிலுக்க போய் தான் பார்ப்போம் என்றவாறே தெற்கு வாசல் பக்கமாய் நடக்கிறேன் சென் ஜோன்ஸுக்கு அடுத்த படியாக (இப்போ எப்பிடியோ) நேரம் தவறாமை என்பதன் இலக்கணம் நல்லூரில் தான் காண முடியும் அப்படி அந்தந்த உற்சவங்கள் அந்தந்த வேளைகளில் உரிய நேரத்தில் நடந்து கொண்டே இருக்கும்... வசந்த மண்டபத்தில் பஞ்சாலாத்தி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது நான் தெற்கு வாசல் படியைக் கடந்து உள்ளே போகிறேன் அரோஹரா என்ற வாறே... அழகுற உள் வீதி அளவான பக்தர்கள் சற்று நேரத்தில் சாமி உள்வீதி வலம் வருகிறது அழகாய் ஆரோகணித்த வண்ணம்...

பக்தி பரவசத்தில் சற்று நேரம் திழைத்தபடியே சாமியை நோக்கிய வண்ணம் பின் புறமாக சாமியுடன் மேள தாள விற்பன்னர்களுடன் நடக்கிறேன்... உண்மையில் இது தான் வரம்...
அப்படியே யாக சாலைக்கு சாமி வர நான் வெளியில் வந்தால் தமிழ் சிங்களம் எல்லாம் கைகளில் ஸ்மார்ட் போஃன் வைத்தும் டி எஸ் எல் ஆர் வைத்தும் செல்ஃபி குள்ஃபி என வளைத்து வளைத்து போஃட்டோ எடுத்த படி... திருவிழாக்கள் தொழில்நுட்பமயப்படுதலின் ஆரம்பகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற மனநிலையுடன் ஆதீனம் நோக்கி நடக்கிறேன் வெள்ளைக்காரன் வேட்டியுடனும், வெள்ளைக்காரி சீலையுடனும் கோயிலுக்கு வருகிறார்கள் இவர்கள் தான் அடுத்த கலாச்சார காவலர்கள் என்ற வாறே வெளி வீதி சாமி உலாவிற்காய் ஆதின வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன்.
ஆங்காங்கே அழகான பிள்ளைகளைக் காணக்கூடியதாய் இருந்தது சும்மா சொல்ல கூடாது மொத்தத்தில எல்லாமே செம்ம பிகருகள் தான் சாமி வரும் வரை அதுகளை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்... அந்த காலத்தில் செய்த தொழிலை இப்போ செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி...
சாமி வருகிறது... மீண்டும் வெளி வீதியில் நடக்கிறேன் என்னுடன் என் நண்பனும் இணைந்து கொள்கிறான் இருவரும் பழைய நினைவுகளை மீட்டிய வண்ணம் சாமியை தூரே விட்டு விட்டு எங்கட பாட்டுக்கு நடந்து தேர்மூட்டியடியில் வந்து நின்று மீண்டும் அதே கணக்கெடுப்பு... எல்லோரும் அழகிகள் தான் பிழை சொல்வதற்கில்லை.
மச்சான் இண்டைக்கு சாமி உள்ள போனோன்ன கரம்சுண்டல் வாங்கி சாப்பிட்டு போவம் எண்டான் சரி எண்டு ஆதீனத்தடிக்கு வாறம் சாமியும் உள்ள போது... அந்த கரம் சுண்டல் இப்போ ஏதோ ஸ்பெசல் எண்டு மரவள்ளி எல்லாம் போட்டு கறியெல்லாம் ஊத்தி வித்தியாசமா இருந்திச்சு ம்ம்ம் ஒரே அடில அடிச்சு தள்ளிட்டு, கடைகளை பாத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கிறன்... அழகாய் சோபித்திருகிறது நல்லூர்... கண் கவர் கடைகள், கவர்ச்சியான பொருட்கள் என்று... ம்ம்ம்
இவைகள் தான் இன்றும் பழமை மாறாமல் அதே தோற்றத்தோடு... 'மகிழ்ச்சி' திருவிழாவும் முடியப் போது நல்லூரும் சோர்விழந்து போக போது எண்டு நினைச்ச படி கச்சான் ஒரு பக்கட்ட வாங்கி உடைச்சு உடைச்சு கோத றோட்டில போட்ட படி வீட்டுக்கு வந்து ஈசி சியரில கண்ணை மூடினால் அன்றும் இன்றும் எத்தனையோ மாற்றங்கள்... ஆனால் எல்லாமே ஒரே மாதிரியாய்...

Saturday, August 20, 2016

சேற்றிலே முளைத்த செந்தாமரை...!

தூரமாய் ஓர் ஓலை குடிசை
தள்ளி தள்ளி பனை மரங்கள்
இவை நடுவே உடுப்பு காய
குறுக்கும் நெடுக்குமாய்
கொடி கைறுகள்
ஓட்டை கிழிஞ்சல்களுடன்
எந்நேரமும் காயும்
கந்தல் ஆடைகள்
கூனல் விழுந்த ஆச்சி
குதூகலமாய் சிறுவன்
மக்கிப் போன விறகு சேர்த்து
மண் சட்டி பானை சமையல்...
மழை வந்தால் போதும்
குசினியின் சட்டி பானை எல்லாம்
விறாந்தையில் படையெடுக்கும்
விடியும் வரை ஆச்சிக்கு வீட்டிற்குள்ளே
அலைச்சல் வரும்...
முதுமையில் ஆச்சி
முத்தான பேரன்
ஆச்சிக்கு ஆதாரம் பேரன்
பேரனுக்கு அன்பு காட்ட ஆச்சி
சிறு குழந்தை அவன்
வாழ்வின் பொறுப்புக்களை
நித்தமும் படிப்பினையாய்...
பொழுது போக்க
முற்றத்தில் விளையாட்டு
தூக்கம் தேட ஆச்சி கதை
வயித்தைக் கழுவ
அவள் போடும்
வறண்டு போன கறி சோறு...
காதல் என்ற போர்வையில்
காமத்தில் சிக்குண்டு
இரு மனமும்
சிற்றின்பம் கண்டதினால்
சிதறி விழுந்த முத்து இவன்
மனமறியா தாயொன்றால் - வீதியிலே
மறைத்து விடப்பட்டவன்...
விடுகதையாய் போன - இவன்
வாழ்வின் பேசு பொருளாய்
அவன் ஆச்சி!
போக்கற்ற வேளைகளில்
முற்றத்தில் அவன்
உறுட்டி விளையாடும்
அந்த பெட்டியில் தான்
உன் தாய் உன்னை விட்டு சென்றாள் - என்று
புத்தி பேதளித்தும் பேசாமல்
மௌனித்திருக்கும் அவன் ஆச்சி
காலத்தை வென்ற கடவுளாய்
என்றும்...!