எனக்கோ பீதி மெல்ல மெல்ல அதிகரிக்கவே வேகமாக நடக்க ஆரம்பித்தேன் எங்கே நான் ஓடினால் வீடு வந்து சேர முன்னர் மூச்சுத் திணறி மயங்கி வழியில் விழுந்தால் பழி தீர்க்கும் கெட்ட ஆத்மாக்களின் பிடியில் சிக்கி விடுவனோ என்ற பயத்தில் யாராவது வழித்துணை தருவார்களா என்று தேடியபடி நடக்கலானேன், அத்தனை கடவுளும் நொடியில் கண்களில்...
மழையும் கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது தூரமாய் ஒரு உருவம் என்னை நோக்கி வருவதாய் உணர்ந்தேன் அது என்னைக் கடக்கும் முன் நான் வேகமாய் ஓடினால் இன்னும் கொஞ்சம் வீட்டுக்கு கிட்டவாய் சென்றுவிடலாம் என்ற ஆவலில் என்னையறியாமல் ஓட ஆரம்பிக்கிறேன், வீதியில் நின்ற நாய் ஒன்று என்னைக் கலைக்க ஆரம்பிக்கவே ஓட்டத்தை நிறுத்திவிட்டேன் அப்போது தான் ஞாபகம் வந்தது நாய்களுக்கு அமானுஷங்களை உணரும் தன்மை இருப்பதாய் யாரோ முன்னர் சொன்னது.
மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த நாயின் பக்கமாய் நிண்டுவிட்டேன் சிறிது நேரத்தில் தூரமாய் வெளிச்சம் ஆம் ஒரு ஆட்டோ என்னை நெருங்கியது. எப்பிடியாவது அதில் ஏறி வீடு சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் கையை நீட்டி மறித்தேன் ஆட்டோ ஓடி வந்தவர் உருவம் கூட இயல்பிற்கு மாறாய் இருப்பதாய் ஒரு உணர்வு கறுப்பான உருவம், தாடியுடன் அழுக்கான உடை வாயில் பீடி வாயாலும் மூக்காலும் புகை. எதுவானாலும் நான் இதிலே சென்றுவிட வேண்டும் இல்லையேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைப்பாட்டில் வீட்டின் அடையாளத்தை சொல்லி ஏறி அமர்ந்தவுடன் வந்தது ஒரு வித தெம்பு.
பயத்தைப் போக்க ட்ரைவருடன் கதை தொடுக்கிறேன் எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை, அதுவும் எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற அந்த தெம்பில் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.
விடிகிறது காலை, வழக்கம் போல வெளியில் வர வீட்டு வாசலில் அடிபட்டு நெழிந்த ஆட்டோ என் நினைவைத் தட்டி எழுப்புகிறது 16 நாட்களுக்கு முதல் நண்பனும் நானும் காரில் பயணிக்கும் போது அதிவேகத்தில் வந்து யாரும் அற்ற வீதியில் ஆட்டோ ஒன்றுடன் மோதி விட்டு பயணித்தது. அதன் தாக்கமாக இருக்க கூடும் என்று நினைக்கும் போதே எனது கைபேசி மணி ஒலிக்கிறது அதை எடுத்து காதில் வைக்கிறேன் நண்பன் வீதி விபத்தில் மரணமானதாய் அவனின் தான் புலம்பி அழும் அந்த அழுகை என்னை அப்படியே புரட்டிப் போட்டது...
No comments:
Post a Comment