Wednesday, November 30, 2016

நயினாதீவு!

கனத்த மனதோடு வள்ளத்தில் இருந்து பாலத்தில் கால் வைக்கிறேன், ஊருக்கே உரிய தனித்துவமான அந்த ஈர்ப்பு, தாய் அன்பிற்கு ஈடான அந்த குளிர்ந்த காற்றின் வருடல், பாலம் பட்டு தெறிக்கும் கனத்த அலையின் நீர்த்துகள்களின் பன்னீர் வரவேற்பு! அங்கும் இங்கும் நடமாடும் நம்மவர்கள் சக ஊரவர்கள்!
சரவணமுத்து வாத்தியார்ட பேரன் தானே நீர் என்றும், பொன்னம்மா குஞ்சியாச்சிட பேரனா தம்பி நீர் எண்டும், சுசீலா டீச்சர்ட மகனா நீர் எண்டும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் எம் உறவுகளின் பந்தம் இன்றும் அதே பாசத்துடன் புத்துயிர் பெற்றிருப்பதைப் பறைசாற்றும்!
கைப் பையை ஒரு கையில் ஏந்தி எட்டடி நடக்கையிலே கம்பீரமாய் வரவேற்கும் தாயவளின் ராஜ கோபுரம் நாம் அறியா மாத்திரத்தில் நெஞ்சில் கை வைத்து ஒருகணம் கண் மூடி அம்மாளாச்சி தாயே என்று முணுமுணுத்தே நகரச்சொல்லும்!
பலத்த காற்றை எதிர்கொண்டு கோயில் நோக்கி பாலத்தில் நடப்பதன் சுகம் வேறு லெவல்! கிட்டவாய் அம்மாளை தரிசித்து கோயிலடி வாமதாஸ் அண்ணன் கடையடி போகையிலே அது தீவின் நவீனத்தின் அடையாளமாய், நயினாதீவின் குட்டி நகரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அந்த இடத்தை! பெரும்பாலும் எல்லாவசதிகளும் பெருவாரியாய் கிடைக்கும் இடம்!
அந்த இடத்தில் தான் என்னோடு கூட நடக்க சேர்ந்து கொண்டது அந்த பறவை!
அது நிச்சயமாக நம் மூதாதேயராய் தான் இருக்க வேண்டும், நான் நடக்கும் வீதியெங்கும் என் கூடவே வர ஆரம்பிக்கிறது, ஆரம்பத்தில் அதை நான் துரத்திவிடுவதிலே குறியாய் இருந்தேன் காரணம் அது என் கையில் இருக்கும் வடைக்கு குறி வைக்கிறது என்ற நினைப்பில் ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல!
மறுகணம் துரத்த எத்தணிக்கவே, அது என்னிடம் சொல்கிறது 2ம் வட்டாரம் முந்திய கலகலப்பில்லை!
என்னது! காகம் பேசுமா?
ஆம் என்னிடம் பேசியது!
அது தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியிலும் ஒவ்வொருவரைப் பற்றி விளக்கம் கொடுத்தபடியே நகரத் தொடங்கியது!
இது இன்னாருடைய காணி, இது இன்னாருடைய கடை, இது இன்னாருடைய வளவு, இது இன்னாருடைய ஒழுங்கை, அது சொல்லும் ஒவ்வொரு இன்னாரின் பின்னரும் இப்ப இதில் யாரும் இல்லை, யாரும் வந்து பார்ப்பதும் இல்லை, எல்லாம் வெறிச்சோடி போச்சு என்ற கனதியான ஏக்கம் கலந்தே இருந்தது!
அன்னதான மடம் தாண்டி தொடர்ந்தும் நடக்கிறோம், சுந்தா மாமாவின் வீடு இருந்ததற்கான ஒரே ஒரு தடையமாய் உடைந்து புதைந்து போன தொட்டி வீதியோரமாய், சற்று நேரம் இழைப்பாற அந்த குந்தில் அமர்கிறேன் தடையமே இல்லாத வளவில் அழகான வீடு வீறுகொண்டு எழுந்து நின்றது!
உள்ளே என் உறவுகள் அதே கழிப்புடன், நிஜ‌மாக்கப்பட்ட என் கனவுகள் அங்கே உருவங்களாகி தமக்கிடையே பேசிக்கொள்கின்றன! சுந்தா மாமாவின் குரல் மட்டும் எனக்கு தெளிவாக கேட்கிறது காரணம் அவரை நான் அண்மையில் சந்தித்ததன் பிரதிபலிப்பாய் கூட இருக்க கூடும்!
அந்த பறவை எனக்கு சொல்கிறது பார்த்தாயா உன் உறவுகள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று... ம்ம்ம் உண்மை தான் நவீனத்தில் புதையுண்டு கிடக்கின்றன எமக்கான வாழ்வு!
கனவை நிஜமாக்கி விட்டு மேலும் நடக்கிறேன்...
ஏதோ சொர்க்காபுரிக்குள் நுளைவதான உணர்வு!
ஆம் சொர்க்கம் என்றே சொல்லலாம் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது புத்த விகாரையும் அதன் சூழலும் என்னே ஒரு முற்போக்கு, என்னே ஒரு மேம்படுத்தல்! எதிர்ப்புக்கள் பல இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் தடைகள் இல்லை. அந்த சூழல், மொழி மீண்டும் என்னை கொழும்பிற்கு கடத்தி விட்டதான உணர்வு காரணம் எல்லாமே சகோதர மொழிமயமாக்கல்!
அந்த பறவை ஏழன சிரிப்போடு சொல்கிறது இது எல்லாம் நம்மவர் காணிகள், பார்த்தாயா ஆக்கிரமிப்பை! ஸ்ரீமான்ர காணி வீடு எல்லாம் மாளிகை போல! ம்ம்ம் நடக்கட்டும்... இன்னும் எவ்வளவற்றை தாரைவார்க்கப் போகிறோம்!
இப்படியே இறுதி வேகத்தடையை கடந்து நடக்கையில் ரதினி சித்தியின் வளவு எல்லையோடு பௌத்த ஆக்கிரமிப்பு முற்றுப் பெற்றுள்ளது... அதுவும் தொடருமா என்ற ஆச்சரியக் குறியை அந்த பறவையின் பார்வை எனக்கு உணர்த்தியது!
அதைக் கடக்க சிவகாமி சின்னம்மா வளவுக்க சின்னதாய் ஒரு கட்டடம் எட்டிப்பார்த்தபடி... ஏதோ ஒரு செயற்திட்டத்திற்கான ஆரம்பக்கட்டம் என்றே நினைக்கின்றேன்! அது வரவேற்க்கத்தக்கதாய்...
பறவை மேலும் தொடர்கிறது பார்த்தாயா உன்னுடைய இடத்தை... வெறிச்சோடுப்போய், காடுபத்திப் போய் ஆள் நடமாட்டமே இல்லாமல் என்று அது இழுக்கும் போது நிதி அன்ரியின் ஆள் நடமாட்டமே இல்லாத காடு பத்திப்போய் நிற்கும் அந்த வீடு கண்முன்னே!
எங்களால் கனவுகளில் மட்டும் தான் இந்த அழகிய ஊரில் வாழ முடியுமா என்ற கேள்வி வந்து சிறு வண்டு போல் கண்ணில் விழவே கண்கள் பனித்தன, கண்ணில் விழுந்த அந்த வண்டு கூட ஆக்களே இல்லாத இடத்தில் நாம் மட்டும் என்னத்தை கண்டு விட்டோம் என்ற உண்மையை சொல்லி மாய்ந்ததை போல் இருந்தது...
மேலும் ஒரு அடி எடுத்து வைத்து நகர முடியவில்லை! 2ம் வட்டாரம் எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுக்க தொடங்கியது அந்த பறவை...
இதிலே ஒரு பெரிய‌ ஆலமரம், ஆலடி மீனாச்சி, சரவணமுத்து வாத்தியார், பொன்னம்மா, கோபுவீட்டு அம்மம்மா அது தான் என்ர பெரியம்மம்மா, அங்கால குமரைய்யா அண்ணன், இஞ்சால கந்தைய்யா, இந்தா புனிதவதியா, பின்னுக்கு சிவகாமியா, அதுக்கும் பின்னுக்கு குற்றாலம் அதுகளின்ர பெடியள், அதுகளின்ர பேரப்பெடியள் எண்டு அது சொல்லும் ஒவ்வொரு பெயர்களிலும் நிஜ‌மாகி அந்தந்த இடத்தில் என் உறவுகள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள்...
கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை! அம்மம்மா சொல்லும் கதைகள் அனைத்தும் நிஜத்தில் என் கண் முன்னே! அம்மம்மா அடிக்கடி சொல்லுவா 2ம் வட்டாரம் தான் எப்பவும் டாப்! அது உண்மை தான் போலும்! மாட்டு வண்டிப் பாதை, ஒற்றையடிப் பாதை, கிடுகு வேலை, காவோலை, கருக்கு மட்டை கதவுகள்... ஆடு, மாடு, நாய், கோழி வளவுகளிற்கால் அடுத்தவர் வீட்டிற்கு போக வழி என்று 2ம் வட்டாரம் உயிர்பெற்றுக்கொண்டிருந்தது அந்த பறவை சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்!
உண்மையிலே கிராமியத்தை அழகாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்!
வியந்து என் வட்டாரத்தை பார்த்து நிற்கையிலே என் உறவுகள் என்னை அழைப்பதாயும் அவர்களோடு நான் கூடி இருப்பதாயும் இவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என்ற ஏக்கத்தில் நான் அந்த நொடிகளை வாழத்தொடங்கையில் என் தோளில் வந்து அமந்த அந்த பறவை காதோரம் சொல்லுகிறது...
வாழ்க்கை என்பது இது தான்... என்றும் கூட வரும் சொந்த பந்தங்கள், அன்பான உறவுகள், எழிமையான வாழ்க்கைமுறைகள், இதை விட வேறு எதை இப்போது எதிர்பார்க்கிறாய்!
போ!
உன் உற‌வுகளோடு வாழ்ந்து பார் என்று சொல்லியபடி அந்த ஆலமரம் இருந்த மண்ணை தோண்டி புதையுண்டு கொண்டது அந்த பறவை! அது வேறு யாராகவும் இருக்க முடியாது! ஆலடி மீனாச்சியாக தான் இருக்க முடியும்!
பாம்புகள் வாழ நாம் கட்டி வைத்திருக்கும் வீடுகள், புற்க‌ள் புதர்கள் வளர பூட்டி வைத்திருக்கும் எமது வீடுகள், ஓடுகள், சிலாகைகள் கள்ளருக்கு தாரை வார்க்க கட்டி வைத்திருக்கும் வீடுகள் எல்லாம் தரைபட்டமாகிக்கொண்டிருந்தன நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடுத்த அடிகளிலும்!
இதே நிலைமை தான் எனது ஊரின் எல்லா வட்டாரங்களிலும்...
அழிவு என்பது வந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்க முயற்சி செய்யாவிடின்!
நாம் வாழ்ந்த பூமியை, வீட்டை வந்து பார்த்து திருத்தியமைக்காவிடினும் பரவாயில்லை... தற்சமயம் இருக்கின்றதறுவாயிலாவது வைத்துப் பாதுகாக்கலாமே...!

Wednesday, September 28, 2016

ஆளுமையின் நாயகன் - தனபாலன் சேர்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவர் முன்னுதாரணமாக எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட நபர்களின் ஆளுமையால் மாறிக்கொண்டே தான் இருக்கும்.

எனது வாழ்க்கையிலும் ஒருவர் இன்றும் முன்னுதாரணமாய் இருகிறார், அவர் வேறு யாரும் இல்லை என்னுடைய கல்லூரியின் அதிபர் திரு.தனபாலன் சேர் அவர்கள். அவரது ஆளுமை, ஆற்றல், முற்போக்கு நடத்தைகள் அபாரமானது. சென். ஜோன்ஸ் கல்லூரியில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் படித்தவர்கள் பாக்கியசாலிகள். 



நான் அறிந்தவரையில் தனபாலன் சேரின் ஆளுமை கண்டு வியந்தவர்கள் பலர், நேர்மையான பேச்சு, தரமான ஆங்கிலம், நேரம் தவறாமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றுக்கு இன்றும் உதாரணம் எம் ஆசான் தனா சேர் தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரை நாம் இன்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றோம் காரணம் நாம் கடந்து வந்த பாதையில் தனபாலன் சேரின் வழிகாட்டல் படி ஏதோ ஒரு இடத்தில் நம்மை இன்றும் கடக்க வைக்கிறது.

சென். ஜோன்ஸ் இல் படித்தவன் என்ற திமிர் எல்லா சென். ஜொன்ஸ் மாணவனுக்கும் இருந்தாலும் தனபாலன் சேரின் ஆளுமையின் கீழ் வளர்ந்தவனுக்கு என்றும் கொஞ்சம் கூடவே திமிர் இருக்கும் காரணம் அவன் பதப்படுத்தி வளர்க்கப்பட்டவன்,  வளர்க்கப்பட்டவன் என்பதை விட சேரைப் பார்த்து வளர்ந்தவன் என்று கூறுவது சால சிறந்தது.

நான் ஒரு ஆசிரியரைப் பார்த்து முரட்டுத்தனமாக ரசித்திருக்கிறேன் என்றால் அது தனபாலன் சேர் மட்டுமேயாகத்தான் இருக்க வேண்டும், தனபாலன் சேர் குணாதிசயங்கள் பற்றி சொல்லுவதானால் அளவான உயரம், மிடுக்கான தோற்றம், கட்டக்கையோ இல்ல புல்சிலீப் சேர்ட் போட்டு அதை வடிவா இன் பண்ணி அதற்கு ஏற்றால் போல் டையும் கட்டி ஒரு கையை (கூடுதலால இடது கை) பொக்கட்டுக்குள் வைத்து அவரின்ர பங்களாக்குள்ள இருந்து கிரவுண்ட் கரையோரமா நடந்து வாற ஸ்டைல் இருக்கே! சொல்ல வார்த்தைகள் இல்லை... சுருங்க சொன்னால் தனபாலன் சேரைப் போல் கம்பீரமாய் நடக்கப் பழகி என் போல் தோற்றவர்கள் பலர்! 

ஆசிரியர்கள் பிரச்சினை தொடங்கி, தனிப்பட்ட மாணவனின் பிரச்சினைகள் வரை அத்தனையையும் சுமூகமாக அணுகக்கூடிய கைங்கரியம் தனபாலன் சேரிடம் கொஞ்சம் அதிகமே இருந்தது எனலாம். அதற்கு உதாரணம் நான் என் அனுபவத்தையே சொல்கிறேனே!


நான் ஒரு தடகள விளையாட்டு வீரன், ஆகையால் கோலூன்றி பாயும் பயிற்சியில் மாலையில் ஈடுபடும் போது ஒருமுறை தனபாலன் சேர் அவரது பங்களாவில் இருந்து பார்த்து விட்டு எனக்கு கிட்டே நெருங்குகிறார், எனகோ நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குகிறது, கிட்டவாய் வந்தவர் சிறு புன்னகையுடன் Welldone i have seen you from my house, you are doing well in pole vault, You know Prabakaran master! he is good in pole vault, you better get some advice from him, he will guide you... என்று கூறியபடி மீண்டும் புன்னகைத்து அவரது ஸ்டைலில் நாடியை வலது கையால் தடவிய படி நடக்கிறார். 

இப்படியே நாட்கள் ஓடி விடுகிறது தனபாலன் சேர் ஏதோ கல்லூரி விசயமாய் கொழும்புக்கோ, எங்கேயோ சென்று விடுகிறார். அதை அறியாமல் நான் ஆங்கிலத்தில் தனபாலன் சேரிற்கு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி விடுகிறேன் உயரம் பாய்தல், கோலூன்றி பாய்தல் விளையாட்டுக்களுக்கு எங்களுக்கு பொதுவான ஒரு மெத்தை வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேரில் சென்று எனது கோரிக்கையை முன் வைக்க தயக்கதினால். அந்த‌ கால கட்டத்தில் அமலசீலம் மாஸ்டரும், ஞானப்பொன்ராஜா சேரும் தான் கல்லூரி நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 

நான் அனுப்பிய கடிதம் அமலியிடம் சென்றுவிடுகிறது, அமலி அதை பிரித்து படித்துவிட்டு அமளிப்பட்டு ஆள் அனுப்புகிறார் என்னை கையோடு கூட்டி வரும் படி, அப்போது நாங்கள் வில்லியம்ஸ் ஹாலில் கொமர்ஸ் செக்ஸனுக்குள் இருக்கிறோம். எட்டுக்குண்டி என்ர பெயரை சொல்லிக்கொண்டு அமலசீலன் மாஸ்டர் பிறேம்ஜியை கூட்டிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லவே எனக்கு விளங்கிட்டு அமலி கையில தனபாலன் சேருக்கு நான் எழுதின கடிதம் கிடைச்சு மனுசன் குழம்பிட்டு எண்டு.

கொஞ்சம் தயக்கத்துடன் அமலியிடம் போறன், அமலியின்ர முதல் கேள்வி ஏன் இப்பிடி கடிதம் எழுதினி? உம்மட கோரிக்கை நியாய‌மானது தான் இருந்தாலும் அத நீர் பீ.ஓ.ஜீ மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் எண்டு சொல்லிக்கொண்டே ஞானப்பொன்னியிடமும் இதைப் பற்றி விவாதிக்கிறார். நான் சொன்னன் எனக்கு நேர போய் கதைகிற பயத்தில தான் இப்பிடி கடிதம் எழுதினன் எண்டு சொல்ல, எனிவே ப்றின்சிப்பல் வந்தோண இத நான் குடுக்கிறன் நீர் சேர வந்து சந்தியும் எண்டு என்னை அனுப்பி வைகிறார் அமலி.




ரெண்டொரு நாளில் தனபாலன் சேர் பாடசாலைக்கு வந்ததும் மீண்டும் அழைப்பு வருது பிறேம்ஜி உம்மை ப்ரின்சிப்பல் வந்து சந்திக்கட்டாம். அண்டைக்கு உண்மையிலே பயந்திட்டன். பதற்றத்துடன் தனபாலன் சேரின்ட றூமுக்க போறன். 

Excuse me Sir என்ற வாறே உள்ளே நுழைகிறேன். 

முழு நேர பயத்துடன் சென்ற எனக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. 

தனபாலன் சேர் கையில் என்னுடைய கடிதம் இருந்தது, கடிதத்தை ஆட்டி ஆட்டி சொல்லுகிறார்: 
Excellent letter you have written and the way of writing is perfect. 
மிரண்டே விட்டேன். சிறிது நேரம் கடிதம் பற்றி கதைத்தவாறே கடிதத்தின் சாராம்சத்தை பற்றி எனக்கு விள‌க்குகிறார்...

ஏன் இன்னமும் மெத்தை(Mattress) வாங்கப்பட‌வில்லை என்றும் அதற்கான வேலைப்பாடுகள் நடப்பதாகவும் கூறி, இனி ஏதும் இப்படியான பிரச்சினைகள் இருந்தால் கடிதம் தேவையில்லை எந்த நேரமும் நீர் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறிய அந்த motivational words என்னை ஏதோ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது தனபாலன் சேரை. 



இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தன்னலம் பாராது பொது நலமாக பொதுப்பட்ட பிரச்சினைகளை தானே அணுகி தீர்த்து வைக்கும் அவரது குணம் என்றுமே பாராட்டுக்குரியது.

இன்றும் நான் நேரம் தவறாமால் நிகழ்ச்சிகள், வைபவங்கள், வேலைத் தளங்களுக்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கல்வி கற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியே!
இன்றும் நான் ஆங்கிலத்தில் ஓரளவு புலமையோடிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனபாலன் சேர், மற்றும் என் சென். ஜோன்ஸ் கல்லூரி தான்.

இப்படிப் பட்ட ஆளுமை மிக்க மனிதரின் கீழ் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொள்கிறேன்...