Friday, December 31, 2010

காகம் கத்தினா ஆக்கள் வருவினும் எண்டது உண்மையோ...???


சும்மா சொல்லக்கூடாதுங்க என்ன தான் கறுப்பா இருந்தாலும் நம்மாக்கள் காகத்த இன்னமும் முன்னுரிமை குடுத்து தான் வைச்சிருக்கிறாங்கப்பா. வெள்ளிக்கிழமை விரதமெண்டாலும் சரி சனிக்கிழமை விரதம் எண்டாலும் சரி காக்காக்கு சோறு வைச்ச பிறகு தான் நாமளே சாப்பிடுறம். அப்ப பாருங்களன் நிலமைய.

இண்டைக்கும் நான் பதியப்போற இந்த பதிவு முழுக்க முழுக்க காகத்தப் பற்றினது தானுங்கோ. அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரைக்கும் வீட்டு முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப் போகினும் எண்ட கருத்து இன்னமும் வழக்கத்தில தான் இருக்குது. தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் இத மறுக்க மாட்டினும் எண்டு நினைக்கிறன். அதுவும் தீவுப் பகுதிகளைச் சேந்தவராய் இருக்கட்டும், இல்ல யாழ்ப்பாணத்த சேந்தவரா இருக்கட்டும் அவங்க எல்லாரும் பரவலா இன்னமும் நம்பிறாங்க முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப்போறாங்க எண்டு.
இது எந்தளவுக்கு உண்மை எண்டது சரியாய் தெரியவில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் காகம் கத்தி வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருக்கிறார்கள் அது தவிர மரணச் செய்திகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றான. அத விட வேற வேற விதமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறி இருக்கிறது. அதனாலேயே காகத்துக்கும் பிரிவுகள் வைச்சிருக்கிறாங்க நம்ம மூதாதேயர்கள். எப்பிடின்னு கேக்குறிங்களா அதாகப்பட்டது “வரத்துக் காகம், கூடாத காகம், செய்தி காகம்” இத விட வேற இருக்கோ தெரியல. எவ்வளவோ கண்டு பிடிச்சவே பெயரா வைச்சிருக்க மாட்டினும்.

கொழும்ப பொறுத்த வரையில காகம் கத்தி ஆக்கள் வாறது எண்ட கதைய சொன்னா காமடியா தான் இருக்கும் ஏன்னா இருக்கிறதே அதிகம் தட்டு வீடுகளில காகம் கார் பாக்கிங் பேஸ்மண்டில நிண்டு கத்தினா இருக்கிற எல்லா தட்டுக்கும் ஆக்கள் போவாங்களா இல்ல ஏதாச்சும் செய்தி தான் அவங்கள சென்றடையுமா... இப்பிடி நீங்க யோசிக்கிறது விளங்குது, அத விட காகம் கத்தி பொமிசன் குடுத்த தான் விருந்தாளிகள் வீடுகளுக்கு போகனும் எண்டு நியதியா என்ன அப்பிடி கேக்கிறதும் விளங்குதுப்பா... பட் நான் இத சரி எண்டு சொல்ல வரலையே...

ஆனா ஊர்ப் பகுதிகளில காகம் கத்துறத முழுமையாக நம்புகிறவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கடந்த வாரம் நான் யாழ்ப்பாணம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற போது வேலை எல்லாம் முடிச்சு வெட்டி நிஜயம் கதைச்சுக் கொண்டு இருக்கேக்க வழக்கம் போல காகம் கத்திச்சு. அப்ப எங்க கை சும்மா இருக்குமோ ”ஹய் சூய்” ஒரே ஒரு சவுண்ட் தான் குடுத்தன் எடுத்துச்சு பாரு ஓட்டம். பட் சின்ன கப்ல திரும்பவும் வந்து கத்திச்சு, ஆனா இந்த தடவ நான் கலைக்கல. அப்ப என்னோட அம்மம்மா சொல்லுறா இது வரத்துக் காகம் போல இருக்கு தம்பி போய் முத்தத்தில அடி அளவடா எண்டா... அடி அளக்கிறது எண்டத அண்டைக்கு தான் நானே கேள்விப்பட்டன்.

அப்பிடின்னா என்னண்டே தெரியாது சோ நான் அதின்ர விளக்கத்த கேட்டன். அம்மம்மா அடி அளக்கிறதுக்கு விளக்கம் சொல்ல தொடங்கினா அதுவும் சும்ம இல்லிங்க ஒரு பாட்டோட விளக்கம் சொன்னா. அத கேக்கிறபோ எனக்கு ஏதோ வெண்பா கேக்கிற மாதிரி இருந்திச்சு. அதுக்கப்புறம் என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.

அம்மம்மா காகம் கத்தினதுக்கு சொன்ன பாட்டு இது தான். பெரியாக்கள் அந்த காலத்தில எழுதினது கணிச்சது எல்லாம் இன்று வரையில் பொய்க்கவில்லை. இத நீங்களும் படிச்சு பாருங்களன்.

கருமகள் அழுத போது, கடுகவே அடி அளந்து
ஒரு பதும் இரண்டும் கூட்டி, ஓரேழு கீவராகில்...
வருவது
சுகம்
இலாபம்
மழை
படை
அயனம்
வெற்றி
கருதிய சாவுண்டன்று கணித்தனர் கலைவல்லானோர்...!!!

பொருள் :

கருமகள் - காகம்
கடுகவே - உடனே
ஒரு பதும் இரண்டும் - பன்னிரெண்டு
ஓரேழு - ஏழு
கீவராகில் - பிரித்தல்

அதாவது இதின்ர விளக்கம் என்னண்டா காகம் கத்தினா உடன முத்தத்தில போய் நிண்டா நீங்க நிக்கிற நிலையில இருந்து உங்கட நிழல் எவ்வளவு தூரத்துக்கு விழுதோ அந்த இடத்த குறிச்சு வைச்சிட்டு உங்க கால் பாதத்தால அந்த நிழலின்ர நுனிவரையில அளந்து வாற எண்ணோட பன்னிரெண்ட கூட்டி அத ஏழால பிரிச்சா வாறது அதாவது வாற மிச்சம் வாறது மேல சொன்ன ஒழுங்கு முறையில அமையுமாம் மிச்சமே வராவிட்டால் அது சாவு செய்தியாய் இருக்குமாம்.

ஆனாலும் இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் கொஞ்சம் வரணுமே அதாவது பாதத்தால அளந்துக்கிட்டு போறப்போ அடி அரைக் கணக்கில வந்தா என்ன செய்யிறது... சோ அப்பிடி அரைல வந்தா அந்த அரைய கணக்கில சேர்க்கிறதே இல்லையாம் Eg - 12 1/2 எண்டு வந்தா 12ஐ தான் கணக்கெடுக்கிறதாம். இன்னொரு சந்தேகம் மழை மப்பா இருந்தா எப்பிடி அடி அளக்கிறதாம்??? யோவ் மழை பெய்யிற நேரத்தில காகம் அடிக்கடி கத்துறத கண்டிருக்கிறியோ...? மூதாதேயர் என்ன முட்டாளுகளா... கொஞ்சம் பகுத்தறிவா யோசிக்கிறதில்ல... என்னையும் சேத்து தான்யா திட்டுறன்.... :P ஏன்னா எனக்கும் இப்பிடி சந்தேகம் வந்திச்சு... :)

சோ
உங்க ஊரில காகம் கத்தினா ஒருக்கால் இத ரை பண்ணிப் பாருங்க சரியா வந்தா சொல்லுங்க. சரி வரும் எண்டு நினைக்கிறன். முன்னோர் வாக்கு அமிர்தம் கண்டியளோ...!!!




Thursday, December 30, 2010

என் 2010ம் ஆண்டின் கனவு கிறிக்கட் அணி...!!!

கிரிக்கட்டின் அகோர வளர்ச்சியும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அது போக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷிஸ் தொடர் வேறு விறுவிறுப்பான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2010ம் ஆண்டும் தனது பணியைச் செவ்வனே செய்து முடிக்கிறது... இத் தருணத்தில் எனக்கான கனவு கிரிக்கட் அணியை தேர்வு செய்திருக்கிறேன். இது 2010ம் ஆண்டில் வீரர்கள் தமது அணிக்காக செய்த பங்களிப்பின் அடிப்படையில் அவர்களது ஆண்டுக்கான சராசரியை அடிப்படையாகக் கொண்டு எந்த வீரர்கள் எனது கனவு அணியில் இடம் பிடித்தால் வலுவான அணியாக திகளும் என்ற கருதுகோளின் அடிப்படையில் என் கனவு அணியைத் தேர்வு செய்திருக்கிறேன்.

இம் முறை கடந்த முறையைப் போல் அல்லாது ரெஸ்ட் போட்டி, ஒரு நாள் சர்வதேசப் போட்டி மற்றும் இருபதிற்கு இருபது போட்டிகள் என்று மூன்று வகையான போட்டிகளுக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என முக்கியமான நாடுகளில் இருந்து வீரர்களை ஏலம் எடுத்திருக்கிறேன். இவர்களும் என் கனவு அணியை நிச்சயம் வெற்றியடையச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ரெஸ்ட் போட்டியில் நான் தெரிவு செய்த கனவு அணி வீரர்களின் விபரங்களைப் பார்ப்போம்...!!!

ரெஸ்ட் அணி :

ரெஸ்ட் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து நான்கு வீரர்களும், இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து நான்கு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து இரண்டு வீரர்களும், நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அணி வீரர்களின் விபரத்தைப் பார்போமேயானால்....!!!

MEK Hussey (Aus)
IJL Trott (Eng)
AN Cook (Eng)
KP Pietersen+ (Eng)
SR Tendulkar (Ind)
VVS Laxman (Ind)
HM Amla (RSA)
JH Kallis* (RSA)
KC Sangakkara^ (SL)
DL Vettori (NZ)
MG Johnson (Aus)
JM Anderson (Eng)
Harbhajan Singh (Ind)
DW Steyn (RSA)
M Morkel (RSA)
M Muralitharan (SL)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இவர்களே என்னால் தேர்வு செய்யப்பட்ட என் கனவு அணி ரெஸ்ட் வீரர்கள். இருந்தும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து எந்த ஒரு வீரரையும் என் கனவு ரெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாமல் போனமை. பார்க்கலாம் அடுத்த ஆண்டுக்கான கனவு அணியில் இவ் அணி வீரர்கள் இடம் பிடிக்கிறார்களா இல்லையா என்று.

அடுத்ததாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான எனது கனவு அணியில் எவ் அணி வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு நாள் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒரு நாள் போட்டி அணி :

MEK Hussey (Aus)
KP Pietersen (Eng)
SK Raina (Ind)
MS Dhoni+ (Ind)
LRPL Taylor (NZ)
RT Ponting (Aus)
AB de Villiers (RSA)
KC Sangakkara*^ (SL)
CH Gayle (WI)
JH Kallis (RSA)
DM Bravo (WI)
DW Steyn (RSA)
Mohammad Amir (PK)
DL Vettori (NZ)
JM Anderson (Eng)
PM Siddle (Aus)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இறுதிக்கட்டமாக கிறிக்கற் சிறிது காலம் கவனிப்பாரற்றுப் போன தருணங்களில் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் கிறிக்கட் ஆர்வலர்கள் அனைவரையும் போட்டியின் இறுதிக்கட்டம் வரையில் நுனிக்கதிரையில் உக்கார வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்து போனது இந்த இருபதிற்கு இருபது போட்டிகள். அன்றிலிருந்து கிறிக்கட் போட்டிகள் புத்துயிர் பெற்றதெனலாம் அந்த அளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாக இந்த இருபதிற்கு இருபது போட்டிகள் மாறி இருக்கின்றது. இந்த போட்டியைப் பொறுத்த வரையில் வேகத்துக்கும் விவேகத்துக்குமே முக்கியத்துவம் எனலாம். அவ்வாறான போட்டியிலும் எனக்கான
கனவு அணியை தேர்வு செய்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் என் கனவு இருபதிற்கு இருபது போட்டிகளுக்கான வீரர்களின் விபரம் இதோ...!!!

20 - 20 போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

20 - 20 அணி :

DJ Hussey (Aus)
SR Watson (Aus)
KP Pietersen (Eng)
V Sehwag (Ind)
YK Pathan (Ind)
LRPL Taylor (NZ)
AB de Villiers (RSA)
Abdul Razzaq (PK)
TM Dilshan^ (SL)
CH Gayle+ (WI)
SB Styris (NZ)
DM Bravo (WI)
DL Vettori* (NZ)
DP Nannes (Aus)
GP Swann (Eng)
DW Steyn (RSA)


+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

நான் தெரிவு செய்த 20 - 20 போட்டிக்கான கனவு அணியில் அதிகமான வீரர்கள் சகல துறை வீரர்களாகவே உள்ளனர். ஆகவே இந்த அணி மிகவும் வலுவான அணியாக திகழும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நான் 2010 ல பாத்ததில என்னால தெரிவு செய்யகூடியதா இருந்தது இவர்களைத் தான். எங்க உங்களால முடிஞ்சா உங்களுக்கென ஒரு கனவு அணிய உருவாக்கி என்னோட கனவு அணியோட மோத விடுங்க யாரு ஜெயிக்கிறாங்க எண்டு பாப்பம். நான் றெடி நீங்க றெடியா...???












Friday, December 24, 2010

யாழ்ப்பாணம் சீர்கெடுதா தாத்தா...??? தாத்தாட கருத்த கவனிச்சியளோ...???

இம் முறை என் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் முழுக்க முழுக்க பதிவையும், புகைப்படங்களையும் மையமாகக் கொண்டே அமைந்திருக்கிறது. அதாவது நான் பதிவுலகத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தும் என் சொந்த மண்ணில் இருந்து இதுவரையில் எந்த ஒரு பதிவையும் பகிர்ந்ததில்லை. ஆக இம்முறை எப்பாடுபட்டாவது என் பிறந்த மண்ணில் கால்கள் பட்டபடி பதிவிட வேண்டும் என்ற அவாவில் என் வீட்டுமுத்தத்தில் இருந்து கொண்டு நான் இன்று பகல் கலந்துரையாடிய சுவாரசியமான பதிவை சுடச்சுட உங்கள் முன் ஆவலால் ஒப்புவிக்கிறேன்.

நான் பகிர இருக்கிற இந்த விசயம் ஏற்கனவே பலரால் அலசப்பட்டிருக்க கூடும் இருந்தாலும் என் பார்வையில் எப்படியான கருத்துக்கள் ஒன்றை ஒன்று சாடி நிற்கின்றன என்பதனை நீங்களே பாத்து
சொல்லுங்க. ஊருக்கு எண்டு வந்திட்டா எவ்வளவு நேரம் தான் வெட்டியா வீட்டுக்கையே குந்திக்கிட்டு இருக்கிறது. ஆனபடியா சும்மா ஒருக்கால் ஏரியாவ சுத்திக்கொண்டு வருவம் எண்டு வெளிக்கிட்டன் பிறேக்கே இல்லாத என்னோட சைக்கிளில. அப்பிடியே ஒவ்வரு இடமா அட்டண்டன்ஸ்ச போட்டுக்கிட்டே வர்றபோ தான் ஞாபகம் வந்திச்சு கணேசு வாத்தியார் வீட்டையும் ஒருக்கா போகணும் எண்டு. வாத்தியார் எண்டா போல நினைச்சிடாதீங்க எனக்கு படிப்பிச்ச வாத்தியார் எண்டு. இவர் எங்கள பொறுத்த வர அ.மு காலத்த சேந்தவர். நீங்க யோசிக்கிறது விளங்குது எங்களுக்கு கி.மு தான் தெரியும் அதென்ன அ.மு. அதாவது அம்மாக்களுக்கு முன். அதுதாங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து வாத்தியார். என்னக்கு ஒரு வகையில தாத்தா. இப்ப இந்த பயோ டேட்டா எல்லாம் வேணாமே...!

அப்போ தாத்தாக்கும் ஒரு சலாம் போட்டிட்டு உடனேயே வெளிக்கிடுவம் எண்டு தான் நம்பி உள்ள போனன். போனப்புறம் தான் தெரிஞ்சிச்சு சும்மா போன ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்ப வை எண்டு அவசரப்பட்டுட்டமோ எண்டு. பட் தாத்தா கூட நான் பகிர்ந்துக்கிட்ட விசயம் எல்லாமே நடமுறையோட ஒத்தே இருந்திச்சு. அது தாங்க எனக்கே ஆச்சரியம்! வாத்தியார்க்கிட்ட அரிவரில இருந்து அரசியல் வரைக்கும் எல்லாமே அத்துப்படி...! அப்புறம் என்ன என்னைய சும்மா விட்டிடுவாரா என்ன! ஒவ்வரு விசயமா புட்டுப்புட்டு வைச்சுக்கிட்டே வந்தார். சரி நானும் அவர் சொல்லுற எல்லாத்துக்கும் ஆம்மா போட்டு க்கிட்டே வந்தன் ஒரு கட்டத்தில தாத்தா யாழ்ப்பாணத்தின்ர இண்டைய நிலமைக்க வந்தார். இந்த இடத்தில நான் முழிச்சிட்டன். ஏன்னா இப்போ எல்லாருமே பரவலா கதைக்கிறது இத பற்றி தான். சரி என்ன தான் அவர் அப்பிடி புதுசா சொல்ல போறார் எண்டு நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தன். என்ர பங்குக்கு சில கேள்விகள் தாத்தாட்ட கேக்க வேண்டி இருந்திச்சு சோ அப்பப்போ நான் அவர குறுக்கு விசாரணை செய்துக்கிட்டே இருந்தன். இதால யாழ்ப்பாண விசயம் எங்களுக்குள்ள கேள்வி பதிலா ஒரு உரையாடலாவே மாறிப்போச்சு.

தாத்தா கூட நான் கதைச்சத உரையாடல் பாணில சொன்னா தான் ஒரு கிக் இருக்கும். சோ எனக்கு தற்சமயம் ஞாபகம் இருக்கிற, அவர்கூட கதைச்ச அத்தனையையும் இங்க உரை நடையிலையே தாறன் சரியே...!

முக்கிய குறிப்பு :
சில கட்டங்களில் சில சொற்கள் இந்த TVல தண்ணியடிக்கிற கட்டங்களில படம் மங்கலா வாற மாதிரி இங்க சில சொல்லுக்கு நீங்களே அர்த்தம் போட்டுக்குங்க... Fill in the Blanks with suitable words :P

பேச்சு வாக்கில நான் கேட்டன் தாத்தா யாழ்ப்பாணம் இப்பெல்லாம் முன்னைய விட மாறி இருக்கெண்டு நினைக்கிறியளோ.... அப்ப அவர் சொன்னார் யாழ்ப்பாணம் மாறிட்டு எண்டு கடவுளே எண்டு நான் சொல்லவே மாட்டன் ஆனா யாழ்ப்பாணத்தின்ர புனித தன்மைய சீர்குலைக்கிற நடவடிக்கைகள் தான் தற் சமயம் நடந்தேறிக் கொண்டு இருக்குது மோனே! இது ஒரு கொஞ்சக் காலத்துக்கு தான்... அதுவும் யாழ்ப்பாணத்தின்ர பெயர கெடுக்கிறதுக்கு எங்கட மக்களையே பகடக் காயா பாவிக்கிறது தான் செரியான மனக் கவலை. இந்த காலத்து பொடியளுக்கு ஸ்டைல் தான் முக்கியம் தம்பி ஊரப் பற்றியோ நாட்டப் பற்றியோ எதுவிதமான கவலையும் கிடையாது.

பின்னேரமானா சைக்கிளையோ இல்ல, இப்ப தான் அப்பா அம்மாட காசுகள சுறண்டி புதுசு புதுசா மோட்டச்சைக்கிள்களையும் வாங்கி இல்லாத பொல்லாத றோட்டெல்லாம் கண்மண் தெரியாம திரியிறாங்கள். இவங்களுக்கெல்லாம் உயிரின்ர மதிப்பே தெரியாதப்பன். இத தட்டிக்கேக்க யார் இருக்கினும் நீர் சொல்லும் பாப்பம். பெடி பெட்டையளுக்குப் பின்னால திரியிறதும், பெட்ட பெடியனுக்குப் பின்னால திரியிறதும் பிறகு இப்ப கொஞ்சக்காலமா அதுகளின்ர அப்பா அம்மா ஆசுப்பத்திரிக்கு திரியிறதும் எண்டு காலம் மாறிப் போய் கொண்டு தான் இருக்கு. எல்லாம் அவன் செயல்.

இப்ப தான் கட்டவுத்து விட்டிட்டாங்களே! ஆளாளுக்கு உரு ஏறிப்போய் திரியிறாங்கள். முன்ன “பெடியள்” இருந்த போது இப்பிடி எல்லாம் திரிஞ்சவையே சொல்லும் பாப்பம்? என்ன ஒரு கட்டுக்கோப்பு! இப்ப எல்லாமே சீரழிஞ்சு போய்க்கொண்டு இருக்கு. அரசியல் எல்லாம் இப்ப எதுக்கு! அத விடுவம், ஏன்னா அரசியல கதக்க போனா இண்டைக்கு நீர் வீட்ட போக மாட்டீர்! அப்பிடி ஒரு கேவலமான அரசியல் இப்ப இருக்குது தம்பி. யாழ்ப்பாணம் இந்த நிலமைல இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். ஒரு காரணம் எண்டு சொல்லுறத விட முழுமுதற் காரணம் எண்டே சொல்லலாம்... ச்சே....ச்சே..!

எப்பிடி எல்லாம் வளங்கொழிச்ச யாழ்ப்பாணம் இப்ப தட்டுத் தடுமாறி தடம் மாறிப்போயிடுமோ எண்டு தான் எங்கள மாதிரி பெரிசுகளின்ர கவலை எல்லாம். இப்பத்தையான் இளசுகளுக்கு இது அடியோட விளங்குதே இல்ல, இதையே நாங்க சொல்ல போனா! யோவ் பெரிசு அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ உன் வேலைய பாத்திட்டு போ...! பிறகென்ன இந்த அவமானம் எங்களுக்கு தேவை தானா....?

ஆனா ஒண்டு அரசியல் இலாபம் தேடினுமோ இல்லையோ யாழ்ப்பாணத்தின்ர அபிவிருத்திய பொறுத்த வரையில ஏதோ முன்னேற்றம் இருக்கு தான் அத யாராலும் இல்லை எண்டு சொல்ல ஏலாது. எண்டாலும் இந்த அபிவிருத்திக்கையும் அசம்பாவிதங்களும் நடக்குது அது தான் கவலையான விசயம். முன்ன வெறிச்சோடிக் கிடந்த றோட்டெல்லாம் இப்ப ஒரே சனக்கூட்டமா இருக்குது. றேட்டுகளும் உதவாது, ஒரே புளுதி, பழக்க வழக்கங்களும் உதவாது, இப்பத்தைய
உண்மை நிலை விளங்காமல் பாத மாறிப் போற எங்கட சனத்துக்கு முன்னைய யாழ்ப்பாணத்துக்கான சரியான வழிய யாராச்சும் காட்டணும் இல்லின்னா அழிவ நோக்கி போற யாழ்ப்பாணத்த யாராலும் தடுக்க ஏலாது மோனே!

தாத்தா சொன்ன கருத்துக்கள வைச்சும் நான் அறிஞ்ச அனுபவிச்ச சில கரணங்களை வச்சும் ஒரு முடிவ நான் வகுக்கிறன் இது எந்த அளவுக்கு உண்மை எண்டத நீங்களே ஊகிச்சுக் கொள்ளுங்க.

பிரபல அரசியல்வாதிகளை போல போரைக் காரணம் காட்டி ஆதாயம் தேடுபவர்கள் பலர் இருந்தும் உண்மை நிலைப்பாட்டை சொல்ல விரும்புகிறவர்கள் வெறும் சிலரே! இதன் காரணத்தால் உண்மையின் வெளிப்பாடுகள் சமுகத்தின் சபையில் எடுபடுவதில்லை. நானும் போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்தவன் தான் என்னாலும் உணர முடிகிறது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்பிற்கும் தற்போதைய யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்புக்கும் இடையிலான வித்தியாசத்தினை. எவ்வளவோ மாற்றங்கள் அபிவிருத்தியிலும் சரி அரசியலிலும் சரி.

மாற்றம் என்று பார்க்கின்றவிடத்து போர் முற்றுப் பெற்று A9 வீதி திறக்கப்பட்டதன் பிற்பாடே யாழ்ப்பாணத்தின் ஏழு அரைச் சனி ஆரம்பிச்சிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் ஒட்டு மொத்தமாய் பார்த்தோமேயானால் கல்வியைப் பொறுத்த வரையில் யாழ் மைந்தர்கள் தான் முதலிடம், விளையாட்டைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தான் முன்னிநிலையில், கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் எங்குமே இல்லாத உயர்வு என எல்லாவிதத்திலும் முதன் நிலையில் யாழ்ப்பாணத்தின் மைந்தர்களே கொடிகட்டிப் பறந்தார்கள். இதெல்லாம் எப்போது A9ற்கு முன். A9ற்கு பின்னர் எல்லாமே தலை கீழாய் மாறிக்கொண்டு வருகிறது.

தவறுகள் எல்லாவற்றையும் நாங்களே செய்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மேல் போட்டுக் கொள்கிறோம். இப்போதெல்லாம் பார்கின்ற பொழுது அடிக்கடி தலைப்பு செய்திகளாக “யாழ்ப்பாணம்” என்ற பதமே சுட்டிக்காட்டப்படுகிறது இதைத் தான் அரசியல்வாதிகள் விரும்பிறார்களா இல்லை இதெல்லாவற்றையும் தெரிந்தும் தெரியாதவர்களாய் இருக்கிறார்களா? எல்லா பிழைகளுக்கும் பொறுப்பாளிகளாய் நாங்களே இருந்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மீது சுலபமாக போட்டு விடுகிறோம்.

தவறுதான் செய்வது என்றாகிவிட்ட பிறகு தவறிற்கான பட்டத்தையும் நாங்களே பொறுப்பேற்கலாம் தானே....! எய்தவன் இருக்க அம்பை நோவானேன்...???

Monday, December 20, 2010

மனம் எனக்காய் அழுகிறது...!

அவள்
என் உயிரோடு சேர்ந்து வாழ்ந்தது
அது ஒரு கனாக்காலம்...

அவள்!
அழகானவள்...
அன்பானவள்...
உயிரினும் மேலானவள்...!

என்
மனம் எனக்காய் எடுத்துரைத்த பாடங்கள் இவை...

அவள் என் பார்வையில் பட்ட பொழுதுகளில்
விலகி நடந்தேன்
அவளை நான் காதலித்திடக் கூடாதென்பதற்காய்...!

இருந்தும்

மனமோ என் கடிவாளத்தை
இறுகவே பற்றிக் கொண்டது
நான் அவளைக் காதலிக்க வேண்டும் என்பதற்காய்...
மனம் ஒரு மந்தி! அறிந்திருக்கவில்லை அன்று.

அவள் கண்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டேன்
அன்று...
நிசப்தமான இரவுகளில் அவள்
நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டேன்...
மீள முடியாத இன்ப வலி காதல்...
ஒவ்வொரு நிமிஷங்களும்
எனக்காய் உணர்த்திய காதல் தார்ப்பரியங்கள்...

எனக்குள் பிறந்திட்ட
புது றணத்தில் எத்தனை வலிகள்...
கார் இருளில் நீண்டு சென்ற
எனக்கான பகல் பொழுதுகள்...
கிறுக்குப் பிடித்தவனாய் அன்று...

வார்த்தைகளை மெல்ல கோர்க்க
பழக்கித் தந்தது காதல்...
நேரத்தை விழுங்க காட்டித் தந்ததும்
காதல்...!

காலப்போக்கில் எத்தனை காத்திருப்புக்கள்...
சலித்துப் போயும் சாந்தமானவனாய் நான்...

எல்லாம் அவள் அன்புக்காய்...

என்னைப் புரிந்தும் புரியாதவளாய்
அவள்...!
அவளைப் போல் எடுத்தெறிய
தெரியவில்லை எனக்கு...

சில கணங்களில்
என்னை வார்த்தைகளால் வஞ்சித்துக் கொள்வாள்
அப்போதெல்லாம்
என்
இதயத்தில் நெருப்பை வைத்ததைப் போல் இருக்கும்
எனக்கு....

இருந்தும் பொறுத்துக் கொள்வேன்
என் உயிர் அவளாயிற்றே...!
அன்றும் நம்பி இருந்தேன்
அவளுக்கு என்மேல்
அதீத பிரியம் என்று...!!!

காலப்போக்கில்
தொடர்புகள் தூரம் போகிறது...!

என்னவளுக்கு
கடிதம் வரைந்தேன்
பதிலேதும் இல்லை...
தொலைபேசியில் அழைத்தேன்
குரல் ஏதும் இல்லை...
நேரில் சென்றேன்
அவள் அங்கு இல்லை...

இதயமே வெடித்தாற் போல்
சுறுண்டு விழுகிறேன் சுடு மணலில்...
காய்ந்த சருகுகள் கன்னத்தில் ஒட்டிக் கொள்கிறது...
மெல்ல எடுக்கையில்
அவள் சென்று வெகு நாட்கள்
தடயம் சொல்கிறது சருகுகள்...!

இன்று என்
கண்களில் கண்ணீர் வரவில்லை...
மனம் எனக்காய் கதறி அழுகிறது
காதலை உணரா ஜடத்தை
எனக்கு குறி காட்டியதற்காய்....!!!

















வலிகள் பிடித்திருந்தால் கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்... :)