Thursday, August 5, 2010

என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!!!

வழக்கம் போல் புலர்கிறது காலை
வழக்கத்துக்கு மாறாய்
எனது செயற்பாடுகள்
எல்லாமே வேகமாய் நடப்பனவாய்
ஒரு புரிதல்...!

பாயைச் சுருட்டிக் கொண்டு
கட்டில் பக்கம் ஓடுகிறேன்...
சுவரோரம் அவற்றை சாய்த்துவிட்டு
அருகே தொங்கும் நாட்காட்டியில்
தின பலன் பார்ப்பதற்காய்...
திகதி கிழிக்கிறேன்...!
இடபம் - புதிய சந்திப்பு
பார்த்த கணத்தில் இருந்து
மனதில் அன்று மட்டும் ஏதோ
கேள்விகள்...!

அந்தரப்பட்டு அவசரப்பட்டு
காலைச் சாப்பாட்டை மறந்து
புறப்பட தயாராகிக் கொண்டிருக்கையில்
அம்மா அழைக்கிறார்
தம்பி ஒருவாயாவது சாப்பிட்டுப் போயன்...
மறுப்புக் குரல் குடுத்து
வேகமாய் வாசல் கடக்கிறேன்...!

என்னவாய் இருக்கும்..?
யாராய் இருக்கும்..?
அவள் எப்படி இருப்பாள்...?
வினாக்கள் மட்டுமே என்னுள்
விடைகள் ஏதுமில்லை...
இப்படியே நுழைகிறேன்
ஏதோ ஒரு Plazzaக்குள்...
என் தேவையை ஒவ்வொன்றாய்
நிவர்த்தி செய்து கொண்டுவருகிறேன்
இருந்தும்
புதிய சந்திப்புக்களுக்கான
தடயங்கள் ஏதும் இல்லை...

ஒரு கட்டத்தில்
மனசு கேட்கிறது என்னிடத்தே
”ஏன் இத்தனை ஆர்ப்பரிப்பு...?
நீ யாரையாவது சந்திக்க நேர்ந்தால்
அவர்கள் ஏன் ஒரு ஆணாக இருக்கக் கூடாது...?
இல்லை
வயது வந்தவராக இருக்கக் கூடாது...?”
மனசின் கேள்வி நிஜாயமானதாய்
எனக்குப்பட்டது...!
ஒரு கணம் என் தலையை நானே தட்டிக் கொண்டு
இத்தனை நேரமும் என் எண்ண ஓட்டத்தில்
ஒரு பெண்ணின் சந்திப்பாய் எண்ணியிருக்கிறேனே... சே...!

அவ்விடம் விட்டு நகர
வாசல் நோக்குகிறேன்
எதிரே ஒரு தேவதை...
என்னுள் எல்லாமே ஸ்தம்பித்தாயிற்று
அவள் முன் ஒரு சிலை என நின்றேன்
சில வினாடிகள்...!
என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!

Heyyy....!
Helloooov...!
Excuse meee...!
அவள் என்னிடத்தே ஏதோ சொல்லிக் கொள்கிறாள்
நானோ அவள் கண்கள் வழி உள்நுழைந்து
அவள் மனசில் எனக்காய் இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்...!
இது தான் கண்டதும் காதலா... ம்ம்
கண்களை குணுக்கி
உதடுகளைச் சுழித்தபடி விலகிச் செல்கிறாள்
அவள்...

என்னுள்
மீண்டு வந்தேன் நான்
ஆனால்
என் முன் அவள் இல்லை...
தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறாள்
சற்றே துரத்துகிறேன்...
Excuse me...! Excuse me...!
மெல்லத் திரும்புகிறாள்...
அவள் விழி விழிம்பில் சிறைப்பட்டுக் கொண்டேன்
நான்...!

மெல்ல வாய் திறக்கிறேன்...
you... you... you are looking very cute...!
என்னை அறியாமல் சொல்லிவிட்டேன்...
அவளோ சிறிதாய் புன்னகைத்து
Thanks... என்று ஒரு வார்த்தையில்
எல்லாத்தையும் முடித்துவிட்டு
அவள்பாட்டுக்கு சென்றுவிட்டாள்...!

இது தான் அந்த சந்திப்பா...?
இருந்தும்
அவசரப்பட்டு விட்டோமோ
என எண்ணி கைகளால்
என் தலையைக் குழப்பியபடி
கண்களுக்குள் பதிந்திட்ட
அவள் நினைவுகளோடு
வெளியில் விரைகிறேன் நான்...!!!