Saturday, May 12, 2012

உயிரும் நீயே.........!


அம்மா...!
அன்னையர் தினமென்று 
இதயத்தில் சொல்லெடுத்து
வார்த்தைகளாய் கோர்ப்பித்து
வரைக்கிறேன் ஓர் மடல்!

அம்மா இது உனக்கு  
பாசமே உருவான என் வாழ்த்து மடலாகட்டும்!

கணப்பொழுதும் கலங்காது 
என்னை ரட்சிக்கும் ஆருயிரே
உன் 
நினைவெல்லாம் நானாய்
நித்தமும் நினைத்தபடி 
என் வாழ்க்கைக்கும் அர்த்தம் தந்த தாயே! 
உனக்கு என் கோடி நன்றிகள்!

என்
சோர்விற்கும், தோல்விக்கும்
என்றும் துணை நிற்பது உன்
மடி தான் அம்மா! 
தூக்கம் தொலைத்த பொழுதுகளில்
உன்னைக் கட்டியணைத்து 
குறுகிப் படுத்த மாத்திரத்தில்
தூக்கம் தருவிப்பதும் நீயே அம்மா!  

சின்னக் கோபங்கள், சிறு தண்டிப்புக்கள்
பாசமான பேச்சுக்கள், அன்பான அரவணைப்புக்கள்
என் வாழ்க்கையின் நல்வழிக்காய்
நீ செய்த முயற்சிகள்...! 

நான் வெற்றி பெற்ற நாட்களில்
நீ
உச்சி மோர்ந்து 
தலை கோதிய கணங்களை
எண்ணிப்பார்க்கிறேன்...
பனிக்கிறது என் கண்கள்! 

கால நேரம் தவறாது 
எனக்கான பணிவிடைகள் 
கச்சிதமாய் செய்யும் தாயே!
இன்று! இது! 
உனக்கான நாள் அம்மா! 

அம்மா!
உன்னை நினைக்கும் போது
சிலிர்க்கும் என் தேகம்
அந்த நொடி தாய்மையின் உச்சக்கட்டம்!

என் வழிகாட்டி, கலங்கரை விளக்கு
முன்னோடி எல்லாமாய் நீயே அம்மா!

நடமாடும் தெய்வமாய்
அகிலமெங்கும் பரந்திருக்கும்
தாய்மை என்ற மந்திரத்தின்
அரசிகட்கு! 
என் மனம் கனிந்த 
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்...!